LATEST NEWS
“நான் மட்டும் தலையிடலனா அவ்வளவுதான்..!” இந்தியா-பாகிஸ்தான் மோதல் பற்றி அமெரிக்க அதிபர் போட்ட பகீர் பாம்.. சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்பிய டிரம்ப்..!!
கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தத் தவறினால் 250 சதவீத சுங்கவரி விதிக்கப்படும் எனத் தான் மிரட்டியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கேம்ப் டேவிட் பகுதியில் ஊடகங்களிடம் பேசிய அவர், இந்தச் சுங்கவரி மிரட்டலால் இரு நாடுகளும் தீவிர கோபமடைந்தபோதிலும், அடுத்த நாளே போரை நிறுத்துவதாக ஒப்புக்கொண்டதாகவும், இதன்மூலம் 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட தீவிரமான போர் முடிவுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால், டிரம்பின் இந்தக் கூற்றை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் என்பது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் இடையே நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே சாத்தியமானது என்றும், இதில் அமெரிக்கா உள்ளிட்ட எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் தலையீடும் இருக்கவில்லை என்றும் இந்தியா தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகிறது.
பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்காக இந்தியா கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதியன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடங்கியது. தொடர்ந்து தீவிரமாக நடைபெற்ற இந்த ராணுவ நடவடிக்கை, பாகிஸ்தான் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து மே 10-ஆம் தேதியன்று முறைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது.
