LATEST NEWS
திமுகவில் அதிரடி மாற்றம்… தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம்.. துரைமுருகன் எடுத்த திடீர் முடிவு..!
திமுகவின் ஈரோடு மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் தொய்வின்றி நடைபெறவும் ஈரோடு மத்திய மாவட்டக் கழகம் கலைக்கப்பட்டு, அதிலிருந்த தொகுதிகள் அண்டை மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன்படி, பெருந்துறை சட்டமன்றத் தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டக் கழகத்துடனும், பவானி சட்டமன்றத் தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்துடனும் இணைக்கப்பட்டுச் சீரமைக்கப்பட்டுள்ளன.
அதிமுக முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவில் இணைந்தார். அவருக்கு ஈரோடு மத்திய மாவட்டப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுக் கட்சித் தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மாவட்ட எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளராக சு.முத்துசாமியும், வடக்கு மாவட்டச் செயலாளராக நல்லசிவமும் தொடர்ந்து செயல்படுவார்கள் என்றும் திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
