LATEST NEWS
“சூழ்ச்சியில் விழுந்துடாதீங்க..!” விஜய்யை அலர்ட் செய்த அன்புமணி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!!
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட மறுப்பது குறித்துப் பேசினார். நாளை தமிழகம் வரவுள்ள ராகுல் காந்தியிடம், அந்தமானில் மத்திய அரசின் திட்டத்திற்காகக் காடுகள் அழிக்கப்படுவதை எதிர்ப்பது போல், மேகதாது அணைக்காக 12,500 ஏக்கர் காடுகள் அழிக்கப்படுவதையும் எதிர்ப்பாரா என்று கேள்வி எழுப்புமாறு வலியுறுத்தினார். மேலும், கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள மீதமுள்ள 15 முதல் 16 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன்களை தமிழக அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
காவிரி நீர் வராததால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பரப்பளவு கடுமையாகக் குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனால் அரிசி விலை கிலோவுக்கு மேலும் 30 ரூபாய் வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்தார். கர்நாடகாவுடன் நட்பு பாராட்டும் தமிழக அரசு ஒப்பந்தத்தின்படி காவிரி நீரைப் பெற்றுத் தரத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், இதுபோன்ற முக்கியமான பிரச்சனைகளை முதலமைச்சர் வெளிப்படையான முறையில் அணுக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதேபோல், தவெக தலைவர் விஜய் நேரில் சென்று கேட்டால் கர்நாடகா தண்ணீர் கொடுத்துவிடும் என்ற எண்ணத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட அன்புமணி, மேகதாது பகுதி அமைந்துள்ள தொகுதியைச் சேர்ந்த டி.கே.சிவகுமார் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காகவே இந்த விவகாரத்தை வைத்துத் தேர்தல் அரசியல் செய்கிறார் என்றார். எனவே, டி.கே.சிவகுமாரின் இந்தத் அரசியல் சூழ்ச்சியில் விஜய் போய் விழுந்துவிடக் கூடாது என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துப் பேசினார்.
