LATEST NEWS
வரலாற்றில் முதல்முறையாக நடந்த பகீர் திருப்பம்… ரஷியாவுக்கே பெட்ரோல் விற்கும் இந்தியா.. உக்ரைன் போட்ட ஸ்கெட்ச்… தலைகீழாக மாறிய உலக அரசியல்.. நடந்தது என்ன..?
உக்ரைன் உடனான போரின் தீவிரத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்க, வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் நிலைக்கு ரஷியா தள்ளப்பட்டுள்ளது என ப்ளூம்பெர்க் மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய்யை வாரி வழங்கும் வல்லமை கொண்ட ரஷியா, தற்பொழுது இந்தியாவின் நயாரா எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திடமிருந்து குஜராத் துறைமுகங்கள் வழியாக சுமார் 43,000 பேரல் பெட்ரோலை மறைமுகக் கப்பல் போக்குவரத்து மூலம் இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவிடமிருந்து ரஷியா இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலை வாங்குவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 2024 முதல் உக்ரைன் ராணுவம் ரஷியாவின் எல்லைகளுக்குள் புகுந்து, அங்குள்ள 16-க்கும் மேற்பட்ட பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை ட்ரோன்கள் மூலம் குறிவைத்துத் தகர்த்துள்ளது இதற்கு முக்கியக் காரணமாகும். இதனால் ரஷியாவிடம் பெருமளவில் கச்சா எண்ணெய் கையிருப்பில் இருந்தபோதிலும், அதனைப் பெட்ரோலாக மாற்ற முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டு அந்நாடு முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த ரஷியா தனது பெட்ரோல் ஏற்றுமதித் தடையை இந்த ஆண்டு இறுதிவரை நீட்டித்த போதிலும், பற்றாக்குறை நீடிப்பதால் இந்தியா, பெலாரஸ், கஜகஸ்தான் போன்ற நாடுகளை நாடத் தொடங்கியுள்ளது.
மறுபுறம், இந்தியா மற்றும் ரஷியாவுக்கு இடையேயான இந்த கச்சா எண்ணெய் வர்த்தகம் ஒரு புதிய சுவாரசியமான திருப்பத்தை எட்டியுள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் போர்க்காலச் சூழல்களுக்கு மத்தியிலும், கடந்த ஜூலை மாதத்தில் இந்தியா ஒரு நாளைக்குச் சாதனை அளவாக 2.8 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்து சாதனை படைத்துள்ளது. இவ்வாறு ரஷியாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய்யை வாரி வாங்கும் இந்தியா, அதனைத் தன் நாட்டில் சுத்திகரித்து மீண்டும் ரஷியாவுக்கே பெட்ரோலாக ஏற்றுமதி செய்யும் ஒரு புதிய உலகளாவிய பொருளாதாரக் கொடுக்கல்-வாங்கல் அரங்கேறி வருகிறது.
