DISTRICT NEWS
“ஏன் சார் மின் கம்பங்கள திருடி வித்துட்டாங்கனு…” ஆதாரத்துடன் கேள்வி கேட்ட இளைஞரை தரக்குறைவாகப் பேசிய ஊராட்சி செயலாளர்.. நெட்டிசன்களை கொதிக்க வைத்த வைரல் வீடியோ..!!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மாவூர் ஊராட்சியில், மின் கம்பங்கள் திருடப்பட்டு விற்கப்பட்டது குறித்து புகார் அளித்த நபரிடம் ஊராட்சி செயலாளர் அலட்சியமாகவும், ஒருமையில் தரக்குறைவாகவும் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “ரூ.5000-க்கு மின் கம்பத்தை விற்றுவிட்டீர்கள், இதுகுறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுத்தவரின் எண்ணையே முடக்குவீர்களா?” என்று பாதிக்கப்பட்ட நபர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த ஊராட்சி செயலாளர், “யார் எண்ணை பிளாக் செய்ய வேண்டும் என்பது என் இஷ்டம்; நான் ஒன்றும் உன் வீட்டு வேலைக்காரன் இல்லை” என மிகவும் பொறுப்பற்ற முறையில் மிரட்டும் தொனியில் பதிலளித்துள்ளார்.
“ஏன் சார் மின் கம்பங்கள திருடி வித்துட்டாங்கனு புகார் கொடுத்தா புகார் கொடுத்தவங்க நம்பரயே ப்ளாக் பண்ணுவீங்களா? ஏன் நடவடிக்கை எடுக்கலனு கேட்டா தரக்குறைவா பேசுவீங்களா?”
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா மாவூர் ஊராட்சி செயலாளரின் அலட்சியமான பதில்கள்.. வைரலாகும் வீடியோ… pic.twitter.com/IbXzPSND2R— Polimer News (@polimernews) August 20, 2026
பொதுமக்களின் குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரி ஒருவர், ஊழல் குற்றச்சாட்டுக்கு முறையான விளக்கம் அளிக்காமல், புகார் தாரரை ஆள் வைத்து மிரட்டுவதாகக் கூறி ஒருமையில் பேசியது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. கடமை தவறி, பொதுமக்களிடம் அவதூறாக நடந்துகொண்ட அந்த மாவூர் ஊராட்சி செயலாளர் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
