CRIME
“இனி ஸ்கூலே போக மாட்டோம்..” மாணவிகளுக்கு பீர் கொடுத்து பாலியல் தொல்லை.. அரசு விடுதியில் நேர்ந்த கொடூரம்.. போலீஸாரை அதிரவைத்த திடுக்கிடும் வாக்குமூலம்..!!
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் தூய்மைப் பணியாளராக வேலை பார்க்கும் ராதிகா என்பவரும், கார் ஓட்டுநரான ரகுபதி என்பவரும் நட்பாகப் பழகி வந்துள்ளனர். அப்போது விடுதியில் தங்கிப் படித்த இரண்டு பள்ளி மாணவிகளை ராதிகா மூலம் அறிமுகப்படுத்திக் கொண்ட ரகுபதி, அவர்களிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி இரவில் ரகுபதி வாங்கித் தந்த பீர் மற்றும் சில்லி சிக்கனை விடுதி தூய்மைப் பணியாளர் ராதிகா அந்த மாணவிகளுடன் சேர்ந்து உட்கொண்டுள்ளார். பின்னர் அங்கு வந்த ரகுபதி, தனது மோட்டார் சைக்கிளில் அந்த இரண்டு மாணவிகளையும் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு விடுதி ஊழியரான ராதிகாவும் உடந்தையாக இருந்து, மாணவிகளை அழைத்து வருமாறு கூறி மீண்டும் அவர்களை விடுதியில் கொண்டு வந்து விட்டுள்ளார். பயத்தின் காரணமாக மாணவிகள் இந்த விவரத்தை யாரிடமும் உடனடியாகத் தெரிவிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சுதந்திர தின விடுமுறையின்போது வீடு சென்ற மாணவிகள், தாங்கள் எதிர்கொண்ட கொடுமை குறித்துப் பெற்றோரிடம் அழுதுகொண்டே தெரிவித்துள்ளனர். பெற்றோரின் புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் துறையினர், விடுதி தூய்மைப் பணியாளர் ராதிகா மற்றும் தலைமறைவாக இருந்த கார் ஓட்டுநர் ரகுபதி ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
