LATEST NEWS
“இந்த எழுத்தை பார்த்தாலே பயம்” ‘மு’ என்ற எழுத்தை திட்டங்களில் இருந்து தூக்குவது ஏன்…? உங்க ஜோதிடர் சொன்னாரா..? விஜய்க்கு திமுக இளைஞரணி நறுக் கேள்வி..!!
திராவிட மாடல் அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களை தவெக அரசு மாற்றி வருவதற்கு திமுக இளைஞரணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நகர்ப்புற ஏழை மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட ‘முதல்வர் படைப்பகம்’ என்ற திட்டத்தின் பெயரை, தவெக அரசு தற்போது ‘படைப்பகம்’ என்று மாற்றியுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்களை முடக்கும் நோக்கில் காழ்ப்புணர்ச்சியோடு தவெக அரசு செயல்படுவதாக திமுக இளைஞரணி சாடியுள்ளது. சபாநாயகர் மற்றும் தவெக அமைச்சர்கள் மனதில் ‘தமிழ்நாடு முதலமைச்சர்’ என்றால் அது மு.க.ஸ்டாலின் மட்டும்தான் என்ற எண்ணம் இருப்பதால், ‘முதல்வன்’, ‘முதல்வர்’ என்ற பெயர்களைக் கண்டு பயந்து அவற்றை முடக்க நினைக்கிறார்களோ என்ற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.
மேலும், ‘மு’ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களைத் திட்டங்களுக்குச் சூட்டக் கூடாது என தவெக தலைவர் விஜய்க்கு அவரது ஆஸ்தான ஜோதிடர் ஏதேனும் அறிவுரை வழங்கியுள்ளாரா என்றும் திமுக இளைஞரணி கேள்வி எழுப்பியுள்ளது. தவெக அரசு இதுபோன்ற ‘ஸ்டிக்கர்’ அரசியலைத் தவிர்த்துவிட்டு, மக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் உருப்படியான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் தங்களது கண்டனப் பதிவில் வலியுறுத்தியுள்ளனர்.
