LATEST NEWS
“வா… கொல்கத்தால பெரிய வேலை வாங்கித் தர்றேன்..!” அண்ணன் திட்டியதால் எடுத்த தவறு… 87 நாட்களுக்குப் பின் மனித கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட 12-ஆம் வகுப்பு மாணவி…!!
பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்திலுள்ள காய்காட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த மே 10-ஆம் தேதி தனது சகோதரர் திட்டியதால் கோபித்துக் கொண்டு இரவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். முசாபர்பூர் ரயில் நிலையத்தில் தனியாக அமர்ந்து அழுதுகொண்டிருந்த அம்மாணவியிடம், ஒரு நபர் இரக்கம் காட்டுவது போலப் பேசி கல்கத்தாவில் நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார். கல்கத்தா சென்றடைந்ததும் அம்மாணவி மனித கடத்தல் கும்பலிடம் விற்கப்பட்டார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் ரீதியாகவும், உடல் மற்றும் மன ரீதியாகவும் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டார். சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, கடத்தல் கும்பல் அம்மாணவியை பீகாரின் பாகல்பூர் பகுதியில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிக்கு மீண்டும் விற்றுள்ளது.
கடந்த மே 12-ஆம் தேதி அம்மாணவியின் சகோதரர் காய்காட் காவல் நிலையத்தில் கடத்தல் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மூத்த காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.பி. காந்தேஷ் குமார் மிஸ்ராவின் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. தீவிர விசாரணையின் போது கிடைத்த ஒரு புகைப்படக் குறிப்பின் அடிப்படையில், பாகல்பூர் மாவட்டம் இசிபூர் பர்ஹத் காவல் எல்லைக்குட்பட்ட சீவான்பூர் கிராமத்திற்கு காவல் துறையினர் சென்றனர். சுமார் 35 நிமிடங்கள் அப்பகுதியைக் கண்காணித்த பின், 52 நிமிடங்கள் நீடித்த தீவிர மீட்பு நடவடிக்கையின் மூலம், மாயமாகி 87 நாட்களுக்குப் பிறகு அந்த மாணவியை சிறப்புப் படையினரும் மனித கடத்தல் தடுப்புப் பிரிவினரும் பாதுகாப்பாக மீட்டனர். மேலும், இந்த சோதனையின் போது நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த கடத்தப்பட்ட மற்றொரு சிறுமியும் கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து மீட்கப்பட்டார்.
மூன்றாவது முறையாக அம்மாணவியை விற்கக் கடத்தல் கும்பல் திட்டமிட்டிருந்த நிலையில், காவல்துறையினர் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து இரு சிறுமிகளையும் மீட்டுள்ளனர். இது குறித்து கிழக்கு எல்லைக் காவல் துணை கண்காணிப்பாளர் அலய் வத்ஸ் கூறுகையில், இந்த கடத்தல் சம்பவம் ஒரு பெரிய மாநிலங்களுக்கு இடையேயான மனித கடத்தல் நெட்வொர்க்குடன் தொடர்புடையது என்றும், தொழில்நுட்ப மற்றும் மனித தகவல்களின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்றும் தெரிவித்தார். தற்போது மீட்கப்பட்ட சிறுமிகளுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் வேளையில், தலைமறைவாக உள்ள கடத்தல் கும்பலின் மற்ற உறுப்பினர்களைக் கைது செய்ய காவல்துறையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
