LATEST NEWS
“எதற்காக விசில் அடிக்கிறீர்கள்?”.. மேடையிலேயே ருத்ரதாண்டவமாடிய திருமாவளவன்.. நாமக்கல் இரங்கல் நிகழ்ச்சியில் பரபரப்பு..!!
நாமக்கல்லில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சி ஒன்றில், தொண்டர்களின் கட்டுப்பாடற்ற செயலால் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடும் ஆவேசமடைந்தார். அவர் மேடைக்கு வந்தபோது, ஒழுங்குமுறையைப் பின்பற்றாமல் ஏராளமான தொண்டர்கள் ஒரே நேரத்தில் மேடையில் ஏறி அவரோடு செல்ஃபி எடுக்க முயன்றனர். இதனால் மேடையில் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்தச் சூழலில், அங்கிருந்த சிலர் திடீரென விசில் அடித்து சத்தம் எழுப்பியதால் திருமாவளவன் மிகுந்த கோபத்திற்குள்ளானார். துக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு இரங்கல் நிகழ்ச்சியில் எதற்காக விசில் அடிக்கிறீர்கள் என்று தொண்டர்களை நோக்கி அவர் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். இந்நிகழ்வில் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்து நிறைய விஷயங்களைப் பேச வேண்டும் என்ற ஆவலோடு தான் வந்ததாகவும், ஆனால் தொண்டர்களின் இத்தகைய பொறுப்பற்ற நடத்தையால் தற்போது பேசும் மனநிலையில் தான் இல்லை என்றும் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டார்.
