LATEST NEWS
காலையிலேயே ஷாக்..! அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் ஊழல்..? புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனன் மீது திமுக பரபரப்பு புகார்..!!
தமிழ்நாட்டில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ‘தாயகம்’ கவி என்பவர் பரபரப்புப் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வாதாடும் வழக்கறிஞர்களின் நியமனம் என்பது தகுதி மற்றும் நேர்மையின் அடிப்படையில் நடக்க வேண்டும்; ஆனால் தற்போதைய நியமனங்கள் விலைக்கு வாங்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். விருப்பமுள்ள வேட்பாளர்களிடம் சட்டவிரோதமாகப் பணம் கோரப்பட்டு, அதுவே தேர்வுக்கான முக்கிய தகுதியாக மாற்றப்பட்டிருப்பதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு நெருக்கமானவர் என்று கூறிக்கொள்ளும் வழக்கறிஞர் ஒருவர், அமைச்சர்களான புஸ்ஸி என். ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோரின் பெயர்களையும், அரசியல் ஆதரவையும் பயன்படுத்தி விண்ணப்பதாரர்களிடம் முறையற்ற வகையில் பணம் வசூலித்து வருவதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் மதுரையிலும், அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் இடைத்தரகர்கள் மூலம் விண்ணப்பதாரர்களிடம் பெரும் தொகை வசூலிக்கப்பட்டு வருவதாகவும், பணம் கொடுக்காத தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
விழுப்புரம், திருப்பத்தூர், மதுரை, தர்மபுரி எனப் பல்வேறு மாவட்டங்களில் ஒரே மாதிரியான முறையில் இந்த முறைகேடுகள் நடந்துள்ளதால், இது தனித்தனி மாவட்டப் புகாராகப் பார்க்கப்படக் கூடாது என்று தாயகம் கவி வலியுறுத்தியுள்ளார். இந்த சட்டவிரோதப் பண வசூல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் அமைச்சர்களின் ஆதரவோடு மாநிலம் தழுவி ஒருங்கிணைந்து நடத்தப்படும் ஒரு கூட்டுச் சதித் திட்டம் (Composite Conspiracy) ஆகும். எனவே, சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்குகள், பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அழைப்பு விவரங்களை லஞ்ச ஒழிப்புத் துறை விரிவாக விசாரித்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
