LATEST NEWS
“2 நாளா தூங்கல… பர்கர் சாப்பிட்டா தப்பா..?” வைரல் வீடியோவுக்கு CJP செய்தித் தொடர்பாளர்… விஜேதா தஹியா அளித்த விளக்கம்..!!
டெல்லியில் ‘சலோ சன்சத்’ பேரணி நடைபெற்ற போது, சி.ஜே.பி கட்சியின் செய்தித் தொடர்பாளரான விஜேதா தஹியா அருகில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள பர்கர் கிங் உணவகத்தில் உணவருந்துவது போன்ற காணொளி இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் தெருக்களில் காவல்துறையின் தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை எதிர்கொண்ட வேளையில், கட்சியின் முக்கிய நிர்வாகி உணவகத்தில் இருந்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர். அந்த காணொளியில் சிலர் அவரை நேரடியாக அணுகி, போராட்டத்தில் பங்கேற்காமல் இங்கு என்ன செய்கிறீர்கள் என்றும் கேள்வியெழுப்பினர்.
இந்த விமர்சனங்களுக்கு இன்ஸ்டாகிராம் காணொளி வாயிலாக விளக்கமளித்த விஜேதா தஹியா, கடந்த ஒன்றரை மாதங்களாக இந்த போராட்டத்திற்காகத் தொடர்ந்து உழைத்து வருவதாகவும், இரண்டு இரவுகளுக்கு மேல் தூங்காமல் பணியாற்றியதாகவும் தெரிவித்தார். பசிக்கும் போது உணவருந்துவதில் தவறில்லை என்று கூறிய அவர், பின்னர் அந்த பர்கரில் மைதா மற்றும் கொழுப்புச்சத்து இருந்ததை அறிந்து அதைச் சாப்பிடவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், தான் இந்த இயக்கத்திற்காக எவ்வித ஊதியமும் பெறாமல் நாட்டுக்காகவே பணியாற்றுவதாகவும், பேரணி முடிந்த பிறகே அங்கிருந்து புறப்பட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
https://www.instagram.com/reel/DbBT7wjvfy5/?utm_source=ig_web_button_share_sheet
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நாளில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல போராட்டக்காரர்கள் முயன்றபோது ஏற்பட்ட மோதல்களின் பின்னணியில் இந்தச் சர்ச்சை உருவானது. இப்போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் பலருக்குக் காயங்கள் ஏற்பட்டதுடன், பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இத்தகைய பதற்றமான சூழ்நிலைக்கு நடுவே இந்த வைரல் காணொளி வெளியாகி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
