LATEST NEWS
பகீர் பின்னணி..! “என் பேச்சைக்கேள் இல்லையேல் கொன்றுவிடுவேன்” பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் கழுத்தை நெரித்து கற்பழிக்க முயன்ற சக ஐ.பி.எஸ் அதிகாரி.. சிறையில் அடைப்பு..!!
ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லப்பாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு, சக பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரியான உதய கிருஷ்ணா ரெட்டி பாலியல் தொல்லை மற்றும் கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 30 வயது பெண் அதிகாரி அளித்த புகாரின் பேரில், அத்தாப்பூர் போலீசார் ஆரம்பத்தில் சாதாரணப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால் தற்போது இந்த வழக்கில், உதய கிருஷ்ணா ரெட்டி மீது கற்பழிப்பு மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையில் பெண் அதிகாரியின் கழுத்தில் கையை வைத்து நெரித்ததற்கான தழும்புகளும், காலில் பலத்த காயங்களும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த 33 வயதான உதய கிருஷ்ணா ரெட்டியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் செஞ்சல்குடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணையில், இவர்களிருவருக்கும் கடந்த 2025-ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நாளடைவில் இவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட உதய கிருஷ்ணா ரெட்டி அந்தப் பெண் அதிகாரியைக் கத்தியைக் காட்டி மிரட்டியும், தற்கொலை மிரட்டல் விடுத்தும், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியும் வந்துள்ளார். இதனால் அந்தப் பெண் அதிகாரி உறவை முறித்துக் கொண்டு வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட பிறகும், உதய கிருஷ்ணா ரெட்டி தொடர்ந்து இந்த கொடூர அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
