LATEST NEWS
“அவனுக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா..?” ஜால்ரா அடிப்பவர்களுக்கு மட்டும் WFH..!” கார்ப்பரேட் மேனேஜரின் முகத்திரையைக் கிழித்த ஊழியர்..!!
ரெடிட் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் ஒரு உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்டில், கடுமையான மழை காரணமாக ஊழியர் ஒருவர் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி கேட்கும்போது, அவரது மேனேஜர் காட்டும் பாகுபாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த ஊழியர் தனது மேனேஜருக்கு அனுப்பிய செய்தியில், “காலை வணக்கம், பலத்த மழை காரணமாக கடந்த 30 நிமிடங்களாக உபெர் கேப் புக் செய்ய முயன்றும் எதுவுமே கிடைக்கவில்லை. நான் அதிகபட்சமாக எவ்வளவு நேரம் தாமதமாக அலுவலகத்திற்கு வரலாம், அல்லது இன்று வீட்டிலிருந்தே வேலை செய்யலாமா?” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மேனேஜர், வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி மறுத்து, “தாமதமாக வந்தாலும் பரவாயில்லை, ஆனால் அலுவலகத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும்” என்று பதிலளித்துள்ளார்.
தனக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி மறுத்த மேனேஜர், தனது செல்லப்பிள்ளைகளாகவும், தமக்கு ஜால்ரா அடிப்பவர்களாகவும் இருக்கும் மற்ற ஊழியர்களுக்கு உடனடியாக WFH அனுமதியை வழங்கியதாக அந்த ஊழியர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். ‘r/IndianWorkplace’ என்ற ரெடிட் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், WFH அனுமதி பெற்ற மற்ற ஊழியர்களும் தன்னைப் போலவே அதே பதவியிலும், அதே பணியிலும்தான் இருக்கிறார்கள் என்றும், அனைவருக்கும் ஒரே மேனேஜர்தான் என்றும் தெரிவித்துள்ளார். ஒரே மேனேஜராக இருந்தும், ஊழியருக்கு ஊழியர் விதிகள் மாறுபடுவதாகவும், மேனேஜர் தனது விருப்பத்திற்கு ஏற்ப பாகுபாடு காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வைரல் பதிவைப் பார்த்த இணையவாசிகள், கார்ப்பரேட் துறையில் நிலவும் இதுபோன்ற சூழல்களுக்கு பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “இனி மேனேஜரிடம் அனுமதி கேட்காதீர்கள், நேரடியாக நிலைமையை அறிவித்துவிடுங்கள்; தவறான மேனேஜர்களால்தான் ஊழியர்கள் வேலையை விடுகிறார்கள்” என்று ஒரு பயனர் அறிவுறுத்தியுள்ளார். மற்றொரு பயனர், “நீங்கள் அவருக்கு சாய்ஸ் (choice) கொடுத்ததே தவறு; நேரடியாக வர முடியாது என மறுத்து WFH கேட்டிருந்தால் அவருக்கு வேறு வழி இருந்திருக்காது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
