LATEST NEWS
நான் மட்டும் சட்டமன்றம் போயிருந்தா தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு நெஞ்சு வலியே வந்திருக்கும்.. பரபரப்பை கிளப்பிய ஆர்.பி உதயகுமார்..!!
தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற அதிமுக இணைப்பு விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தற்போதைய தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். “தற்போதைய சூழலில் என்னைப் போன்றவர்கள் மட்டும் சட்டமன்றத்திற்குச் சென்றிருந்தால், அங்கே தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு நெஞ்சு வலியே ஏற்படுத்தியிருப்போம்” என்று அவர் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு ஆளுங்கட்சியினர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற கடமை இருக்கும் போது, தற்போதைய அரசுக்கு அது புரியவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து தவெக அரசை ‘ரீல்ஸ் ஆட்சி’ என்று சாடிய அவர், தமிழக முதலமைச்சருக்கு மேகதாது அணை, காவிரிப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு குறித்து ஏதேனும் தெரியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். தேனி மாவட்டத்தில் மேகமலை புலிகள் சரணாலயத்தை காரணம் காட்டி 60-க்கும் மேற்பட்ட கிராம மக்களை வெளியேற்றும் முயற்சி நடப்பது கூட முதலமைச்சருக்கோ அல்லது பொறுப்பு அமைச்சருக்கோ தெரியவில்லை என்றும், தமிழகத்தில் ஒரு எம்பி கூட இல்லாத தவெக அரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்துவதாகக் கிண்டலடித்துள்ளார்.
மேலும், 2029-ஆம் ஆண்டில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ வரவிருப்பதால் தவெக ஆட்சி நிச்சயம் அப்போது இருக்காது என்றும், தங்களுக்கு ஏன் வாக்களித்தோம் என்று 75 சதவீத மக்கள் தற்போது வேதனையில் உள்ளதாகவும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதே மேடையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்துப் பேசிய அவர், “அதிமுகவில் ராஜா போல் இருந்த ஓபிஎஸ், இன்று திமுகவில் தரையில் அமர்ந்து போராடும் சாதாரண நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்” என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஒற்றுமையுடன் இயங்கி வருவதாகவும் பெருமிதத்துடன் பேசியுள்ளார்.
