LATEST NEWS
அண்ணே.! இப்படிலாம் பேசாதீங்க… நாங்க ஆரம்பிச்சா நிறைய சொல்லுவோம்.. நீங்க மூத்த உறுப்பினர், ஆனா… ஐ.பெரியசாமியின் பேச்சால் கடுப்பான அமைச்சர் ஆனந்த்..!!
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திமுக மூத்த உறுப்பினர் ஐ.பெரியசாமி மற்றும் தவெக அமைச்சர் என்.ஆனந்த் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. விவாதத்தின் நடுவே குறுக்கிட்டுப் பேசிய ஐ.பெரியசாமி, “அண்ணன் இந்த மாறிலாம் பேசாதீங்க.. நாங்க ஆரம்பிச்சா நிறைய சொல்லுவோம்.. நீங்க ஒரு மூத்த உறுப்பினர், இப்படி நடுவில் நடுவில் எழுந்து பேசுவது எங்களுக்குச் சங்கடமாக இருக்கிறது” என்று சற்று காட்டமாகக் குறிப்பிட்டார். திமுக தரப்பில் இருந்து வந்த இந்த நேரடி விமர்சனம் அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது
ஐ.பெரியசாமியின் இந்த விமர்சனத்தைக் கேட்டு கடும் அதிருப்தியடைந்த தவெக அமைச்சர் என்.ஆனந்த், உடனடியாக அதற்குத் தனது நாகரிகமான ஆனால் மிக அழுத்தமான பதிலடியைக் கொடுத்தார். “அண்ணே.. நீங்க மூத்த உறுப்பினர், உங்களுக்கு நாங்க எப்போதும் மதிப்பளிக்கக் கூடியவர்கள். ஆனால், நீங்கள் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்த திட்டங்கள் பலவும் வெறும் பேப்பரில் மட்டும்தான் இருந்தது” என்று கள நிலவரத்தைச் சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்தார். மேலும் தவெக அரசு பதவியேற்ற குறுகிய காலத்திற்குள்ளேயே மக்கள் நலத் திட்டங்கள் எவ்வாறு வேகமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதையும் அவர் அடுக்கினார்.
அரசியல் அனுபவத்தைக் காட்டி தங்களை முடக்க நினைத்த திமுக-விற்கு, நிர்வாக ரீதியான உண்மைகளை முன்வைத்து அமைச்சர் ஆனந்த் கொடுத்த இந்த சாதுரியமான பதில் தவெக தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே வேளையில், தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுக-விற்கும் இடையே சட்டமன்றத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த அரசியல் மோதல், தற்போதைய தமிழக அரசியல் களத்தை மேலும் சூடேற்றியுள்ளது.
