LATEST NEWS
“தவெக சொன்னது பச்சைப் பொய்யா..?!” இணையதளத்தில் வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. தமிழக அரசியலைச் சூடாக்கும் மறுவரையறை விவாதம்..!!
தமிழகத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள தொகுதி மறுவரையறை விவகாரத்தில், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் கருத்துகளுக்கும் வரலாற்று உண்மைகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். புதிய அரசு பதவியேற்ற குறுகிய காலத்தில், கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் செய்யாத சாதனையைச் செய்துவிட்டதாகக் கூறப்படும் பரப்புரை தவறானது என்று அவர்கள் மறுக்கின்றனர். ஏனெனில், கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் 5-ஆம் தேதியன்றே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு, தொகுதி மறுவரையறைக்கு எதிராக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
அன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் எனப் பல முக்கியக் கட்சிகள் பங்கேற்றன. மேலும், பிற மாநில முதல்வர்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மனு அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டது. அந்த முக்கியக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் பங்கேற்காமல், தனது கட்சியின் பொதுச்செயலாளர் மூலம் 5 பக்க அறிக்கையை மட்டுமே அனுப்பி வைத்திருந்தார். ஆனால், தற்போது மற்றொரு தரப்பு இ விவகாரத்தில் தாங்களே புதிதாகச் சாதனை செய்துவிட்டது போலச் சித்தரிப்பது உண்மைக்கு மாறானது என்று விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், அண்மையில் நடைபெற்ற கூட்டம் என்பது ஒட்டுமொத்த அனைத்துக் கட்சிக் கூட்டம் அல்ல; அது தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டமே ஆகும். அதில் பெரும்பான்மையாக திமுக எம்பிக்களே பங்கேற்றனர். அரசியல் லாபத்திற்காக உண்மைகளைத் திரித்துத் தங்களுக்குச் சாதகமாக முடிவுகளைத் திணிப்பது ஆபத்தானது என்றும், தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதி உரிமைகள் தொடர்பான இந்தப் பிரச்சினையை எவ்வித அரசியல் திரிபுகளும் இன்றி உண்மையின் அடிப்படையில் அணுக வேண்டும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்.
