LATEST NEWS
சொகுசு வாழ்க்கை என்னங்க சொகுசு வாழ்க்கை… வயசான என் பெற்றோர் தான் முக்கியம்… லட்சக்கணக்கான சம்பளத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்த மகன்… வெளிநாடு வாழ் இந்தியர்களைக் கண் கலங்க வைத்த பதிவு..!!
கனடாவின் ஆடம்பரமான வாழ்க்கை மற்றும் கைநிறையச் சம்பளம் தரும் வேலையைத் துறந்து, பெங்களூரைச் சேர்ந்த ரமேஷ் என்.என் என்ற ஐடி நிறுவன பொறியியல் இயக்குனர், வயது முதிர்ந்த தனது பெற்றோரைப் பார்த்துக் கொள்வதற்காக மீண்டும் இந்தியா திரும்பிய நெகிழ்ச்சியான கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. வெளிநாட்டின் சிறப்பான எதிர்காலமா அல்லது வயதாகிக் கொண்டே செல்லும் பெற்றோரா என்ற இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்ட பலரில் இவரும் ஒருவராவார்.
கனடாவிலிருந்து இந்தியா திரும்புவது என்பது எளிதான முடிவாக இருக்கவில்லை என்று தனது லிங்க்ட்இன் பதிவில் ரமேஷ் பகிர்ந்துள்ளார். வெறும் வாட்ஸ்அப் வீடியோ கால்கள் மூலம் மட்டுமே பெற்றோரின் விசேஷ தருணங்களைப் பார்ப்பதை விட, அவர்கள் அருகில் இருந்து தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறுவதே முக்கியம் என்று அவர் உணர்ந்துள்ளார். இந்த முடிவு தனது வாழ்க்கைப் பார்வையையே முற்றிலும் மாற்றிவிட்டதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பினால் ஐடி துறையில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற பயம் பலருக்கு இருக்கும், ஆனால் ரமேஷின் அனுபவம் அதற்கு நேர்மாறாக அமைந்துள்ளது. தொழில்நுட்பத்தின் தலைநகரமான பெங்களூரின் துரிதமான வளர்ச்சி மற்றும் ஸ்டார்ட்அப் சூழல் தனக்கு முன்னைவிட அதிக வாய்ப்புகளை வழங்கியதாகக் கூறும் ரமேஷ், தொழில்ரீதியாகத் தான் எந்தவொரு பின்னடைவையும் சந்திக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை மீண்டும் பழக்கப்படுத்திக் கொள்வதில் சில சவால்கள் இருந்தாலும், பெற்றோருடன் இருக்கும் நிம்மதிக்கு முன்னால் அவை மிகச் சிறியவை என்று அவர் எழுதியுள்ளார். “நாம் உலகில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதில் வெற்றி இல்லை; யாருக்கு நம் தேவை அதிகமாக இருக்கிறதோ அங்கு அவர்களுடன் இருப்பதே உண்மையான வெற்றி” என்று அவர் பகிர்ந்துள்ள வாழ்க்கை பாடம், உலகெங்கிலும் வாழும் பல வெளிநாடு வாழ் இந்தியர்களின் இதயங்களைத் தொட்டுள்ளது.
