LATEST NEWS
சத்தமில்லாமல் காய் நகர்த்தும் தவெக…! சரிந்த அதிமுகவைச் சேர்ந்த 4 விக்கெட்டுகள்…திமுக கோட்டையிலிருந்து தூக்கப்படும் 4 தலைகள் யார்..??
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் வெளி ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. இருப்பினும், தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் இல்லாததால், இந்த ஆட்சிக்கு அரசியல் நெருக்கடிகள் நீடித்து வருகின்றன. மேலும், விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததாலும், மற்றொரு எம்எல்ஏ சபாநாயகராகப் பொறுப்பேற்றதாலும் தவெகவின் நேரடிப் பலம் 106 ஆகக் குறைந்துள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி “இந்த ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து வரும் நிலையில், 5 ஆண்டு கால ஆட்சியைத் தனி மெஜாரிட்டியுடன் முழுமையாக நடத்த தவெக தலைமை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தவெக அரசு தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும், பலப்படுத்தவும் எதிர்க்கட்சிகளிலுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களைத் தன் பக்கம் இழுக்கும் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள நிலையில், சமீபத்தில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரும், கரூர் எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக தற்போது 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருவது உறுதியாகியுள்ளது. மேலும், வட மாவட்டங்களைச் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்கள் விரைவில் ராஜினாமா செய்யக்கூடும் என்பதால், இந்த எண்ணிக்கை 12 ஆக உயர வாய்ப்புள்ளது.
அதிமுகவை மட்டுமின்றி, தற்போது திமுக கூடாரத்தையும் தவெகவின் இந்த வியூகம் அதிர வைத்துள்ளது. திமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் 4 எம்எல்ஏக்களுடன் தவெக நிர்வாகிகள் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அவர்களும் ராஜினாமா செய்யும் பட்சத்தில், தமிழகத்தில் மொத்தம் 16 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த இடைத்தேர்தல்களில் பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றி, எந்தவொரு வெளிக்கட்சியின் ஆதரவும் இன்றி 5 ஆண்டுகளுக்கு ஒரு நிலையான, தனிப் பெரும்பான்மை ஆட்சியை வழங்க விஜய் திட்டமிட்டுள்ளார். விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரின் கணிப்பும் இதற்குச் சாதகமாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
