LATEST NEWS
ஜந்தர் மந்தர்” பெயருக்குப் பின்னால்… இவ்வளவு பெரிய அர்த்தமா…? 300 ஆண்டுகளாக வியக்க வைக்கும் இந்தியாவின் வானியல் அதிசயம்..!!
டெல்லியில் இன்று போராட்டங்கள் நடைபெறும் இடமாக அறியப்படும் ஜந்தர் மந்தர், உண்மையில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வானியல் ஆய்வுகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அறிவியல் ஆய்வு மையமாகும். “ஜந்தர் மந்தர்” என்ற சமஸ்கிருதப் பெயர் “கணக்கீட்டிற்கான கருவி” அல்லது “துல்லியமான அளவீட்டு அமைப்பு” என்ற பொருளைத் தருகிறது. வானியல் மற்றும் கணிதத்தில் ஆர்வம் கொண்ட ஜெய்ப்பூர் மகாராஜா சவாய் ஜெய் சிங் II, அக்கால கருவிகள் சிறியதாகவும் துல்லியமற்றும் இருந்ததால், பெரிய கற்கள் மற்றும் சுண்ணக்கம்புகளால் 1724 முதல் 1730 வரை டெல்லி, ஜெய்ப்பூர், உஜ்ஜயினி, வாரணாசி மற்றும் மதுரா ஆகிய 5 இடங்களில் இவற்றைக் கட்டினார். இதில் மதுராவில் இருந்தது அழிக்கப்பட்ட நிலையில், ஜெய்ப்பூர் ஜந்தர் மந்தர் 2010-இல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
டெல்லி ஜந்தர் மந்தர் 1724-இல் முதன்முதலாக கட்டி முடிக்கப்பட்டது. இங்குள்ள சூரியக் கடிகாரம், வட்ட வடிவ அளவீட்டு கருவிகள் போன்றவை நேரத்தை அளவிடவும், சூரியன், சந்திரன் மற்றும் கிரகங்களின் இயக்கத்தைக் கண்காணிக்கவும் பயன்படுத்தப்பட்டன. இக்கணக்கீடுகள் கடல் பயணம், விவசாய கால நிர்ணயம் மற்றும் பஞ்சாங்கம் தயாரிக்க உதவின. அரண்மனை அல்லது கோவில் வடிவமைப்பு போல் அல்லாமல் முக்கோணம், வட்டம், சாய்வான சுவர்கள் மற்றும் உயரமான படிக்கட்டுகள் கொண்ட இதன் தனித்துவமான கட்டிடக்கலை, அறிவியலையும் கலைநயத்தையும் ஒருங்கிணைத்து உலகக் கட்டிடக் கலைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போது ஜந்தர் மந்தரைச் சுற்றி உயரமான கட்டிடங்கள் உருவாகிவிட்டதால், வானத்தைப் பார்க்கும் பார்வைக் கோணம் மாறி பழையபடி துல்லியமான கணக்கீடுகளைச் செய்ய முடிவதில்லை. மேலும், டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டங்களுக்கான தளமாகச் செய்திகளில் இடம்பெறுவதால், இதன் உண்மையான அறிவியல் அடையாளம் பலருக்குத் தெரியாமல் போகிறது. இருப்பினும், மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு மனிதன் வானத்தைப் புரிந்துகொள்ள உருவாக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னம், இந்தியாவின் அறிவியல் பாரம்பரியம், அறிவாற்றல் மற்றும் கட்டிடக்கலைத் திறனுக்குச் சான்றாக இன்றளவும் திகழ்கிறது.
