LATEST NEWS
“எப்படியாவது கனவு நிறைவேறணும்…” நம்பி ஏமார்ந்த வாலிபர்கள்… நைசாக பேசி லட்சங்களை சுருட்டிய நிறுவனத்தினர்… பகீர் பின்னணி…!!
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அடுத்த புலியூர்சாலையைச் சேர்ந்த அகிலேஷ் மற்றும் தினேஷ் ஆகிய இரண்டு பொறியியல் பட்டதாரிகள், தங்களது வெளிநாட்டுக் கனவுக்காகச் சென்னையைச் சேர்ந்த ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தை அணுகியுள்ளனர். அப்போது அங்குள்ள ஏஜெண்டுகள், சிங்கப்பூரில் மிகக் குறைந்த இடங்களே காலியாக இருப்பதாகவும், உடனே பணம் கொடுத்தால் வேலை உறுதி என்றும் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய அந்த இளைஞர்கள், எப்படியாவது வெளிநாடு சென்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆளுக்கு தலா 6.5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 13 லட்சம் ரூபாயைத் திரட்டி அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த டிராவல்ஸ் நிறுவனத்தினர், விசா விரைவில் வந்துவிடும் என்று கூறி நாட்களைக் கடத்தியதோடு, ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பட்டதாரிகள் தங்களது பணத்தைத் திரும்பக் கேட்டபோது, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மனமுடைந்து அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், வெளிநாட்டு வேலை தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சடகோபன் சீனிவாசன் மற்றும் சேலத்தைச் சேர்ந்த ரகுமான்கான் என்பது வெளிச்சத்திற்கு வந்தது; தற்பொழுது தலைமறைவாக உள்ள இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
