LATEST NEWS
ஆட்சிப் பொறுப்பேற்ற அரை மணி நேரத்திலேயே சதியா…”பெரியார், அண்ணா, எம்ஜிஆர் வழி! நான் முதலமைச்சர் இல்ல, மக்களின் ‘முதல் சேவகன்’…கொண்டாடும் தவெக தொண்டர்கள்…!
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகச் சுருக்கமாகப் பேசிச் சென்ற தவெக தலைவர் ஜோசப் விஜய், இன்று திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் மீண்டும் தனது பழைய ‘பீஸ்ட் மோடில்’ பட்டாசு வெடித்தது போலப் பேசி தொண்டர்களை உற்சாகக் கடலில் ஆழ்த்தியுள்ளார். அரசியல் விமர்சகர்கள் பலரும் அவரை எம்ஜிஆருடன் ஒப்பிட்டுப் பேசி வரும் சூழலில், அதற்குத் தன்னடக்கத்துடன் பதிலளித்த விஜய், “எம்ஜிஆர் உடன் என்னைக் கம்பேர் செய்ய வேண்டாம்; எம்ஜிஆர் எப்போதுமே எம்ஜிஆர்தான். நாம் பெரியார், அண்ணா மற்றும் எம்ஜிஆர் காட்டிய பாதையில் நடக்கும் சாதாரண விஜய் அவ்வளவுதான்” என்று கூறி மக்களைக் கவர்ந்தார். அதேசமயம், “எம்ஜிஆருக்குக் கூட இந்த அளவிற்கு ஓட்டு எண்ணிக்கை கிடைக்கவில்லை, நான் ஒப்பிடவில்லை; என்ன ஒன்று, இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என நயம்படப் பேசி, வரும் தேர்தல்களிலும் மக்களின் முழு ஆதரவு தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
நடந்து முடிந்த தேர்தலில் தவெக ஆட்சியமைக்கக் கூடாது என்பதற்காக திமுகவும் அதிமுகவும் திரைமறைவு ஒப்பந்தம் (Underground deal) செய்துகொண்டு தனக்கு முட்டுக்கட்டை போட முயன்றதாக முதல்வர் விஜய் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். “புதிய அரசு அமைந்ததும் 6 மாதம் வரை அமைதி காப்போம் என்று சொல்லிவிட்டு, இவர்களால் 6 நாட்கள்கூடப் பொறுமையாக இருக்க முடியவில்லை. ஆட்சிப் பொறுப்பேற்றதுமே தங்களுக்கு எதிரான சதிகளை ஆரம்பித்துவிட்டார்கள்” என்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவை ஓபனாகவே சாடினார். தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்த நிலையில், திமுகவினர் தொடர்ந்து தவெக அரசுக்கு எதிராகப் பரப்பி வரும் விமர்சனங்களை மேடையிலேயே அடித்து நொறுக்கி அரசியல் ரீதியாக ஸ்கோர் செய்துள்ளார்.
மேலும், தனக்கு வாக்களித்த பொதுமக்களை விமர்சிப்பவர்களுக்கும் விஜய் ஆவேசமாகப் பதிலடி கொடுத்தார். “உங்களுக்கும் இதே மக்கள் தானே ஓட்டுப் போட்டார்கள்? எனக்கு ஓட்டுப் போட்ட உடனே அவர்களை தற்குறி என்று எப்படிச் சொல்லலாம்? அவர்கள் என்ன வேறு கிரகத்தில் இருந்தா வந்து இறங்கி உங்களுக்கு ஓட்டுப் போட்டார்கள்? மக்களை மதிக்கத் தெரியாதவர்களை மக்கள் தூக்கி வீசிவிட்டார்கள்” என்று முழங்கிய அவர், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தையும், சிறந்த சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்டுவேன் எனத் தொகுதி மக்களுக்கு உறுதியளித்தார். தான் இந்த மாநிலத்தின் ‘முதலமைச்சர் அல்ல, மக்களின் முதல் சேவகன்’ என்று விஜய் பேசியது திருச்சியில் கூடியிருந்த லட்சக்கணக்கான தவெக தொண்டர்களிடையே பலத்த கைதட்டலையும் வரவேற்பையும் பெற்றது.
