LATEST NEWS
“Complete Rest Mode-ல இருக்காரே CM விஜய்…! இமேஜ் சரிஞ்சிடும்னு பயமா? காவிரி விவகாரத்தில் த.வெ.க அரசு மீது ரகுபதி பாய்ச்சல்..!!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், காவிரி நீரை உடனடியாகத் தமிழ்நாட்டுக்கு விடுவிக்க உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் உயர்மட்டக் கூட்டங்களைக் கூட்டி டெல்லி செல்வதும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அழுத்தம் தருவதுமாகச் செயல்படுகிறார். ஆனால், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையில் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு மெத்தனத்தோடும் மிதப்போடும் செயல்பட்டு வருகிறது என்றும், கட்சித்தாவல் வல்லுநர் நிர்மல் குமார் தமிழ்நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளையும் கொச்சைப்படுத்தி, தலைவர் கலைஞர் குறித்தும் அவதூறாகப் பேசியுள்ளார் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் ஜோசப் விஜயோ அல்லது நீர்வளத்துறை அமைச்சரான ஆனந்தோ மேகதாது அணை தொடர்பாக இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஊடகங்களைச் சந்தித்தால் தனது இமேஜ் சரிந்துவிடும் என்று முதலமைச்சர் அஞ்சினாலும், காவிரி போன்ற முக்கியப் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவருக்கு இருக்கிறது. மாநிலத்தின் உயிர்ப் பிரச்சினைகளில் கூட யாரையும் கலந்தாலோசிக்காமல் முதலமைச்சர் வாய்மூடியே இருப்பதும், வார இறுதி நாட்களில் Complete Rest Mode-க்குச் சென்று விடுவதும் காவிரி விவசாயிகளைக் கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது என ரகுபதி விமர்சித்துள்ளார்.
எனவே, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிலைநாட்டும் வகையில் அரசு தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றும், தான்தோன்றித்தனமாகப் பேசியுள்ள அமைச்சர் நிர்மல் குமார் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். காவிரிப் பிரச்சினையில் அரசுடன் ஒத்துழைக்கவும் ஆலோசனைகள் கூறவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகவே இருக்கின்றன; எனவே மாநில நலன் சார்ந்த விவகாரங்களில் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவதைத் த.வெ.க. அரசு இனியேனும் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
