LATEST NEWS
“எனக்கு நீதி கிடைக்கல சாமி” குற்றவாளி மீது எந்த நடவடிக்கையும் இல்ல… காவல் நிலையத்திற்குள்ளேயே விஷம் குடித்த 22 வயது பெண்.. பெரும் பரபரப்பு சம்பவம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள மகாராஜ்பூர் காவல் நிலையத்திற்குள், 22 வயது இளம் பெண் ஒருவர் நீதி கிடைக்கவில்லை எனக் கூறி விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிங்கி நாயக் என்ற அந்தப் பெண், காவல் நிலையத்திற்குள் விஷப் பொருளை உட்கொள்ளும் போது அதைத் தனது மொபைல் போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் தற்பொழுது மாவட்ட மருத்துவமனையில் தீவிரக் கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தரப்பில், கடந்த ஜூலை 6-ம் தேதி அவரது சகோதரர் பிரசாந்த் நாயக் சில கிராமவாசிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் லஞ்சம் பெற்றுக்கொண்டு குற்றவாளிகளைக் கைது செய்யாமல் காலம் தாழ்த்தியதாகவும், இதனால் குற்றவாளிகள் தங்களைத் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தத் தொடர் அலட்சியத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியே அந்தப் பெண் இத்தகைய தீவிர முடிவை எடுத்துள்ளார்.
இருப்பினும் சத்தர்பூர் காவல் கண்காணிப்பாளர் ரஜத் சக்லேச்சா கூறுகையில், இந்த விவகாரத்தில் ஏற்கனவே மூன்று முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று குற்றவாளி ஒருவர் துப்பாக்கியுடன் தங்களை மிரட்டியதாகப் புகார் அளிக்க வந்த இடத்திலேயே, போலீசார் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்த போதே அந்தப் பெண் திடீரென விஷம் குடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் மற்றும் அந்தப் பெண் வெளியிட்ட வீடியோவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருவதாகப் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
