CRIME
“வெளியே வாடி…” கூப்பிட்டு ஒரே நொடியில் ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்… முகமூடி நபரின் வெறி செயல்.. பள்ளி வாசலிலேயே நடந்த கொடூரம்.. நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்..!!
ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சிக்ரோனா கிராமத்தில், பட்டப்பகலில் ஒரு தனியார் பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த சந்தியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை அவர் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தபோது, முகத்தைத் துணியால் மூடியபடி வந்த ஒரு இளைஞன் அவரைச் சந்திக்க அழைத்துள்ளான். அவர் பள்ளி வாயிலுக்குச் சென்றதும், அந்த நபர் திடீரென கத்தியால் அவரது கழுத்து மற்றும் உடலின் பல இடங்களில் சரமாரியாகக் குத்தியுள்ளான்.
இந்தத் திடீர் தாக்குதலால் பள்ளி வளாகத்தில் பெரும் பீதி ஏற்பட்டது. ஆசிரியை ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த நிலையில், அவருக்கு உதவ ஓடிவந்த பள்ளி இயக்குநர் மற்றும் ஊழியர்களையும் தாக்குவதாக மிரட்டிவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான். உடனடியாகப் படுகாயமடைந்த ஆசிரியையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த பயங்கரச் சம்பவம் முழுவதும் பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தடயவியல் குழுவின் உதவியுடன் ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இது ஒரு திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ள நிலையில், கொலையாளியைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு வெளியே, காவல் நிலையத்திற்கு மிக அருகிலேயே நடந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பாதுகாப்பு குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளதோடு, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
