CRIME
“மகளைக் கொன்றும் அடங்காத கொலைவெறி..!” மனைவியையும் விட்டுவைக்காத கணவனின் வக்கிரம்.. சிறையிலிருந்து வெளியே வந்ததும் நடந்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ரெபேக்கா111 என்பவர் கீழ்ப்பாக்கம் ஈ.வி.ஆர். சாலையில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை 31 அன்று மாலை வங்கிக்குள் வாடிக்கையாளர் போல் நுழைந்த நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரெபேக்காவைச் சரமாரியாக வெட்டினார். இதில் தலையிலும் கையிலும் காயமடைந்த ரெபேக்காவின் அலறல் சத்தம் கேட்டு, வங்கியிலிருந்தவர்கள் அத்தாக்குதல் நடத்திய நபரைப் பிடித்துப் போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் ரெபேக்காவின் கணவர் சதீஷ்குமார் என்பது தெரியவந்தது.
கடந்த 2017-இல் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஸ்டெபி ரோஸ் என்ற மகள் இருந்தார். திருமணத்திற்குப் பின் ரெபேக்காவின் நடத்தையில் சந்தேகம் அடைந்ததாலும், சதீஷ்குமார் மதுவுக்கு அடிமையாகித் துன்புறுத்தியதாலும் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக 2024 முதலே கணவரைப் பிரிந்து வாழ்ந்த ரெபேக்கா, விவாகரத்து மற்றும் மகளின் பொறுப்பைக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், மகளைத் தன்னிடம் இருந்து பிரித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் கடந்த ஆண்டு வேளச்சேரி ஓட்டல் ஒன்றில் தனது 6 வயது மகளைக் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.
மகளைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த சதீஷ்குமார், சிறையிலிருந்து வந்த பிறகும் அடங்காமல் ரெபேக்காவிற்கும் அவரது தங்கைகளுக்கும் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர் கொலை மிரட்டல் விடுத்து வந்தார். இதனால் அவர் மீது ஓட்டேரி காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அண்மையில் மீண்டும் ஜாமீனில் வெளியே வந்த சதீஷ்குமார், மனைவியைப் பழிவாங்கும் நோக்கில் கத்தியுடன் வங்கிக்குள் புகுந்து இந்தச் கொடூரத் தாக்குதலை நடத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
