LATEST NEWS
கம்பெனி சீக்ரெட்டை உடைத்த சீனியர்…! வேலைக்கு வந்த 6-வது மணி நேரத்திலேயே ராஜினாமா செய்த ஜூனியர்… டெல்லி சம்பவத்தால் வேலைவாய்ப்பு உலகில் மீண்டும் சூடுபிடித்துள்ள ‘வெளிப்படைத்தன்மை’ விவாதம்..!!
தில்லியில் உள்ள நிறுவனம் ஒன்றில் புதிய ஊழியர் ஒருவர் பணியில் சேர்ந்த 6 மணி நேரத்திலேயே தனது வேலையை ராஜினாமா செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தத் தகவலை ‘ஹையரிங் இன்சைடர்’ நிறுவனத்தின் நிறுவனர் ஹர்ஷித் ஸ்ரீவாஸ்தவ் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நேர்காணலின்போது நிறுவனத்தின் பணிச்சூழல் பற்றிச் சொல்லப்பட்ட தகவல்களுக்கும், பணியில் சேர்ந்த பிறகு அவர் நேரில் கண்ட உண்மை நிலைக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருந்ததே இந்த உடனடி விலகலுக்கு முதன்மை காரணமாகக் கூறப்படுகிறது.
நிறுவனத்திலிருந்து விலகத் திட்டமிட்டிருந்த ஒரு பழைய ஊழியருக்குப் பதிலாகவே இந்தப் புதிய ஊழியர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பும் அந்த பழைய ஊழியரிடமே ஒப்படைக்கப்பட்டது. பயிற்சியின் போது, அந்தப் பழைய ஊழியர் நிறுவனத்தின் உண்மையான வேலைப்பளு, பணிநேரம் மற்றும் பணிச்சூழல் குறித்துப் புதியவரிடம் வெளிப்படையாகப் பேசியுள்ளார். நேர்காணலின்போது மறைக்கப்பட்ட பல எதிர்மறையான விஷயங்கள் தெரியவந்ததால் அதிருப்தியடைந்த புதிய ஊழியர், சேர்ந்த சில மணி நேரங்களிலேயே மேலாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த மேலாளர், பழைய ஊழியரிடம் விசாரித்தபோது, “நிறுவனத்தைப் பற்றிய உண்மை நிலையைத்தான் நான் விளக்கினேன்” எனக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், ஊழியர்களைத் தேர்வு செய்யும்போதே பணிச்சூழல் மற்றும் வேலை நேரத்தை நிறுவனங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். உண்மை நிலையை மறைத்து பணியமர்த்துவது இரு தரப்பிற்கும் நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் இந்தச் சம்பவம், வேலைவாய்ப்பு உலகில் வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.
