CRIME
“அடக்கொடுமையே… ஒரு பீஸ் சிக்கனுக்காக இப்படியாப்பா பண்றது.. அதிக கறி துண்டுகளைச் சாப்பிட்டதால் வெடித்த வாக்குவாதம்… கத்தியால் நெஞ்சிலேயே குத்திக் கொன்றுவிட்டு விபத்து எனக் கதையளந்த நண்பர் கைது..! பெலகாவியில நடந்த பகீர் சம்பவம்..!!”
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில், கறித் துண்டுகளை அதிகமாகச் சாப்பிட்டது தொடர்பாக நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் தனது நண்பனைக் குத்திக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தைச் சேர்ந்த சீதாராம் மற்றும் அருண் ஆகிய இருவரும் பெலகாவியில் உள்ள ஒரு ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று, தங்குமிடத்தில் சக தொழிலாளர்களுடன் சேர்ந்து மது அருந்தி கோழிக்கறி சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, அருண் அதிக கறித் துண்டுகளைச் சாப்பிடுவதாகச் சீதாராம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் எழுந்த தகராறில், போதையிலிருந்த அருண் கத்தியால் சீதாராமின் நெஞ்சில் குத்தியுள்ளார்.
படுகாயமடைந்த சீதாராமைக் காப்பாற்ற மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற அருண், அவர் வேலையின் போது கீழே விழுந்துவிட்டதாகக் கூறி சம்பவத்தை மறைக்க முயன்றார். இருப்பினும், சீதாராமின் நெஞ்சில் ஆழமான காயத்தைக் கண்டு சந்தேகமடைந்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி, இது கொலை என்பதை உறுதி செய்து அருணைக் கைது செய்தனர்.
