LATEST NEWS
“எனக்கு துரோகம் பண்ணிட்டியே” வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் 2-வது திருமணப் படம்… கணவரைக் கோடாரியால் வெட்டிக்கொன்று செவிலியர் தற்கொலை… பரிதவிக்கும் 3 குழந்தைகள்…!!
ஜிம்பாப்வே நாட்டின் தலைநகர் ஹராரே பகுதியில் கணவரின் இரண்டாவது திருமணம் மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், கணவரைக் கோடாரியால் வெட்டிக்கொன்றுவிட்டு மனைவியும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மனித உரிமைகள் ஆணையத்தில் ஆணையராகப் பணிபுரிந்து வந்த மார்ட்டின் முடுவா (42) என்பவருக்கும், அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த அவரது மனைவி லிலியோசா சிராரா (43) என்பவருக்கும் இடையே இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. மூன்று குழந்தைகளைக் கொண்ட இந்தத் தம்பதியினருக்கு இடையே, கணவரின் கள்ளக்காதல் விவகாரமே வினையாக முடிந்துள்ளது.
மார்ட்டின் முடுவாவிற்கு பேஷன்ஸ் மங்விரோ என்ற பெண்ணுடன் கடந்த 5 ஆண்டுகளாகத் தகாத உறவு இருந்து வந்ததோடு, அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. இதனால் மங்விரோவை இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்த முடுவா, கடந்த வாரம் தனது குடும்பத்தினர் முன்னிலையில் அவரை முறைப்படி திருமணமும் செய்துகொண்டார். அதுமட்டுமின்றி, அந்தத் திருமணப் புகைப்படங்களைத் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த முதல் மனைவி லிலியோசா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, கணவருடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்தத் தகராறில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற லிலியோசா, வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து கணவர் முடுவாவின் தலை மற்றும் கைகளில் கொடூரமாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த கணவரைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வீட்டிலிருந்த எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், எலி மருந்து குடித்த லிலியோசா சில நிமிடங்களிலேயே உயிரிழந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த முடுவாவும் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ட்ஸிவாராசெக்வா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
