LATEST NEWS
“7-ல் 6 போச்சு..!” இடைத்தேர்தல் களத்தில் தவெக-வுக்கு பின்னடைவா..? விஜய் டேபிளுக்குப் போன ஷாக் ரிப்போர்ட்… தமிழக அரசியலில் திடீர் பூகம்பம்..!!
அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் இரண்டு விஜயபாஸ்கர்கள் உட்பட 7 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா மற்றும் முதலமைச்சர் விஜய்யின் திருச்சி கிழக்கு தொகுதி என மொத்தம் 8 தொகுதிகள் காலியாகியுள்ளன. இதில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 தொகுதிகளில் ஏற்கனவே தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், வரும் ஜூலை 31 வரை இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனிடையே, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகர் ஜெசிடி பிரபாகரிடமும் நீதிமன்றத்திலும் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்ததால் இடைத்தேர்தல் நடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், காலியான 8 தொகுதிகளில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் திருச்சி கிழக்கைத் தவிர மற்ற 7 தொகுதிகளிலும் தவெகவுக்கு எதிர்மறையான முடிவுகளே வந்துள்ளன. இதனால், அடுத்த இடைத்தேர்தலில் ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ-க்களில் இரண்டு விஜயபாஸ்கர்களைத் தவிர மற்ற 5 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை என்று தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த 5 முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் தங்களுக்குப் பதிலாகப் பொதுத்துறை நிறுவனங்களில் தலைவர் (சேர்மன்) பதவி வழங்குமாறு வற்புறுத்தி வருகின்றனர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர்கள், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் நல்லது நடக்கும் எனக் கூறி அவர்களைச் சமாதானப்படுத்த முயன்று வருகின்றனர். இருப்பினும், தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து கவலையடைந்த அந்த 5 முன்னாள் எம்.எல்.ஏ-க்களும், அதிமுகவில் உள்ள தங்களது பழைய நண்பர்களிடம் தொடர்பு கொண்டு, “அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு அவசரப்பட்டுத் தவறான முடிவை எடுத்துவிட்டோம்; மீண்டும் சீட் கொடுத்தாலும் எங்களால் ஜெயிக்க முடியாது, தவெகவிலும் எந்த முக்கியத்துவமும் இல்லை” எனத் தங்கள் மனக்குறைகளைப் புலம்பி வருகின்றனர்.
