CRIME
“உன் வாழ்க்கையை சீரழிச்சிட்டான்..” காதல் மனைவியை விட்டுவிட்டு மனைவியின் அண்ணியுடன் குடும்பம் நடத்திய நபர்.. நடுரோட்டில் வெட்டிச் சாய்த்த மைத்துனர்கள்..!!
சென்னை அடுத்த செங்குன்றம் மொண்டியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன். இவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்துவந்துள்ளார். ரத்தினவேல் பாண்டியன், பூர்ணிமா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு, இரண்டு மகன்களோடு புழல் காவாங்கரையில் வசித்து வந்தார். நாளடைவில் காதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
இதையடுத்து, தனது மனைவியின் அண்ணன் மனைவியான சரண்யாவிடம் காதல் வயப்பட்டு, அவருடன் கடந்த சில மாதங்களாக தனியாக மொண்டியம்மன் நகர் அருகே வசித்து வந்துள்ளார். இந்த விவகாரத்தை அறிந்த உறவினர்கள், ரத்தினவேலிடம் பலமுறை திருமணத்தை மீறிய இந்த உறவிலிருந்து வெளியே வருமாறு எச்சரித்துள்ளனர். ஆனால், அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. தங்கையின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியதுடன், குடும்பத்தையும் சீரழித்துவிட்டதாக ஆத்திரமடைந்த பூர்ணிமாவின் அண்ணன் சரவணன், ரத்தினவேலை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், மொண்டியம்மன் நகர், வ.உ.சி தெருவில் உள்ள தனியார் பள்ளி அருகே ரத்தினவேல் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பூர்ணிமாவின் சகோதரர்களான சரவணன், தனசேகர் மற்றும் அவர்களின் சித்தப்பா பழனிசாமி ஆகியோர் அவரை வழிமறித்துள்ளனர். மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரத்தினவேலின் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் காவல்துறையினர், வெளியூருக்கு தப்ப முயன்ற சரவணன், தனசேகர், பழனிசாமி ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
