LATEST NEWS
அதிமுகவுக்குப் பலத்த அதிர்ச்சி..! சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1,300 பேர் ஒட்டுமொத்தமாக அதிரடி ராஜினாமா..!!
அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகத்திற்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததைக் கண்டித்து, முன்னாள் எம்.எல்.ஏ அர்ஜுனன் உட்பட 1,300-க்கும் மேற்பட்ட அவரது தீவிர ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாகத் தங்களது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குத் திரண்டு வந்த அவர்கள், அங்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லாத காரணத்தினால், கட்சி அலுவலகப் பொறுப்பாளர்களிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
முன்னதாக, தங்களது இந்த அதிரடி முடிவை எடுப்பதற்கு முன்பாக, முன்னாள் எம்.எல்.ஏ அர்ஜுனன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்றனர். அங்கு தங்களது ஒட்டுமொத்த ராஜினாமா கடிதங்களை ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்திவிட்டு, அதன் பின்னரே தலைமை அலுவலகத்திற்கு வந்து கடிதங்களை வழங்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் நிர்வாகிகள் விலகல் விவகாரம், தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
