LATEST NEWS
“பாதிரியார் வீட்டில் ஒலித்த இந்து வேத மந்திரங்கள்..!” 26 வருஷப் பாசத்திற்குப் பின் மறைந்த பாயம்மா.. கேரளாவை நெகிழ வைத்த உன்னத இறுதிச் சடங்கு..!!
கேரள மாநிலம் எர்னாகுளம் மாவட்டம் சோட்டானிகாராவில், கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் சர்ச் பாதிரியார் பாதர் ஓ.ஜே. ஜேக்கப்பின் வீட்டில் வேத மந்திரங்கள் முழங்க, தீபங்கள் ஏற்றப்பட்டு 88 வயது இந்து மூதாட்டியான பார்வதி என்ற ‘பாயம்மாவுக்கு’ இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு உன்னத சான்றாக மாறியுள்ளது. சிறு வயதிலேயே அனாதையான பார்வதி, கடந்த 2000-ஆம் ஆண்டு ஜேக்கப் குடும்பத்தில் வீட்டு உதவியாளராக இணைந்தார். அப்போது பாதிரியாரின் மனைவி மறைந்துவிட்ட நிலையில், அவரது 6 வயது குட்டி மகள் மெரினைத் தனது சொந்தத் தாயைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பாசத்தைக் கொட்டி வளர்த்தார். மெரின் அவரைப் பாசத்துடன் ‘பாயம்மா’ என்று அழைக்க, கடந்த 26 ஆண்டுகளாக அந்த கிறிஸ்தவக் குடும்பத்தின் பிரிக்க முடியாத அங்கமாகவே பார்வதி வாழ்ந்து வந்தார்.
மெரினின் திருமணத்தின் போது கூடச் சர்ச்சிற்குச் சென்று தாயின் கடமைகளைச் செய்த பாயம்மா, கடந்த ஞாயிற்றுக்கிழமை வயது முதிர்வு மற்றும் நோய் பாதிப்பால் காலமானார். அவர் இந்துவாக இருந்தாலும், அவரது ஆன்மீக நம்பிக்கைக்கு முழு மதிப்பு அளித்த பாதிரியார் குடும்பத்தினர், தங்களது கிறிஸ்தவ வீட்டிலேயே இந்து முறைப்படி புரோகிதர்களை வரவழைத்து, தீபம் ஏற்றி, இறுதிச் சடங்குகளை முழுமையாகச் செய்து முடித்தனர். மெரின் மட்டுமன்றி அந்தப் பகுதி மக்கள் பலருக்கும் தாயாக விளங்கிய பாயம்மாவின் இறுதிப் பயணத்தில் ஜேக்கப் குடும்பத்தினர் மற்றும் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் கண்ணீர் விட்டு அழுத நெகிழ்ச்சியான சம்பவம் இரத்த உறவுகளையும் தாண்டிய மனிதநேயத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
