LATEST NEWS
நெஞ்சை நடுங்க வைக்கும் காட்சி..! அமைதிப் பேரணியில் புகுந்து தற்கொலைப்படைத் தாக்குதல் – பாகிஸ்தானில் அரங்கேறிய கொடூரம்..!!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் மாவட்டத்தில், தீவிரவாதத்திற்கு எதிராக நடைபெற்ற அமைதிப் பேரணியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். காபல் நகரில் மக்கள் தீவிரவாத எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி அமைதி வேண்டி போராட்டம் நடத்திய கூட்ட நெரிசலான சந்திப்பில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. இக்கோரத் தாக்குதலின் போது அங்கிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்தக் குண்டுவெடிப்பில் பலியான 13 பேரில் 8 பேர் காவல்துறை அதிகாரிகள் ஆவர். மேலும், இந்தத் தாக்குதலில் 22 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல் நிலையத்தின் முதன்மை நுழைவாயில் வழியாக தற்கொலை படை பயங்கரவாதி உள்ளே நுழைய முயன்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தியதாக ஸ்வாட் துணை காவல்துறை ஆய்வாளர் ஃபிதா உசேன் தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு உடல் குண்டுவெடிப்பை நிகழ்த்திய தீவிரவாதியுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இப்பகுதியில் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பிற்கு எதிராகப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து போரிட்டு வரும் நிலையில், தற்போதைய இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை. எனினும், மாகாணத் தலைநகரான பெஷாவரில் போலீசாரைக் குறிவைத்து நடத்தப்பட்ட மற்றொரு வெடிகுண்டு தாக்குதலுக்கு TTP அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பல ஆண்டுகளாக வன்முறையால் பாதிக்கப்பட்ட தங்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை எனப் பேரணியில் மக்கள் முழக்கமிட்ட சில நிமிடங்களிலேயே இந்தத் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
