LATEST NEWS
எடப்பாடியை சுற்றி இருக்கும் அந்த 5 சகுனிகள்… அதிமுக அழிவுக்கு காரணமே அவங்க தான்… புட்டு புட்டு வைத்த புகழேந்தி…!!
கோவை உடையாம்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் பெங்களூரு புகழேந்தி, பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்பான சட்டப் போராட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். பல ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் சம்பந்தப்பட்ட சாலை விபத்து வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த நீதிமன்றம், அவ்வழக்கை மீண்டும் முழுமையாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்துப் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியைச் சுற்றி ஐந்து ‘சகுனிகள்’ இருப்பதாகச் சீறினார். இறுதியில் எடப்பாடி பழனிசாமியுடன் அந்த ஐந்து நபர்களும், அவருடைய உதவியாளரும் மட்டுமே எஞ்சியிருப்பார்கள் என்றும், பாரம்பரியமிக்க அதிமுகவை முற்றிலும் தரைமட்டமாக்கிய முழுப் பெருமையும் எடப்பாடி பழனிசாமியையே சாரும் என்றும் சாடினார். மேலும், பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் நுழைவுச்சீட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டதாக எழுந்த புகார்களுக்கு மறுப்பு தெரிவித்த புகழேந்தி, அது முற்றிலும் தவறான தகவல் என்றார். ஒருவேளை அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டது உண்மை என்றால், அதற்கான தகுந்த ஆதாரங்களை வழங்கினால் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கச் செய்வோம் என்று உறுதி அளித்தார்.
இறுதியாக, தவெகவில் இணைந்து வருபவர்கள் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, சட்டத்தின் முன் அவர்கள் தங்களை நிரபராதிகள் என நிரூபிக்க வேண்டும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்சி ரீதியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், பலரும் எதிர்பார்க்கும் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுக்குமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் தனிப்பட்ட முறையில் மனு அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
