LATEST NEWS
“விஜயை சீண்ட சட்டசபையில் சீமான் இருக்கணும்.. உதயநிதி போட்ட பலத்த ஸ்கெட்ச்.. முதல்வர் விஜய்யை சுற்றி சுழலும் அரசியல் புயல்”..!!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், 200 தொகுதிகளைக் குறிவைத்த திமுக 74 இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தது அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மேலும், முன்னதாக திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் மற்றும் வைகோவின் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தற்போது தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் தவெகவின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கூட்டணியை இழந்து பலவீனம் அடைந்துள்ள திமுக, தங்களுக்குச் சாதகமான புதிய அரசியல் கணக்குகளைப் போடத் தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் சீமானும் உதயநிதி ஸ்டாலினும் காட்டிய நெருக்கமும், மேடையில் உதயநிதியை ‘தம்பி’ என சீமான் பாசத்தோடு அழைத்ததும் அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப் படுகிறது. ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற தத்துவத்தின்படி, சட்டமன்றத்திற்குள் சீமான் வந்தால் தவெக அரசை புள்ளிவிவரங்களோடு எதிர்த்துக் கேள்வி கேட்க தங்களுக்குப் பக்கபலமாக இருக்கும் என உதயநிதி கருதுகிறார். சட்டமன்றத்தில் தவெக கூட்டணி கட்சிகளின் பலத்த ஆதரவோடு இருக்கும் சூழலில், வரவிருக்கும் ஏதேனும் ஒரு இடைத்தேர்தலில் சீமானை போட்டியிட வைத்து, அவருக்குத் திமுக ஆதரவளிக்கக் கூடும் என்ற புதிய அரசியல் எதிர்பார்ப்பு தற்போது பரவலாக எழுந்துள்ளது.
