LATEST NEWS
உஷார்..! “குடிக்க தண்ணி இருக்கா..? கைப்பையில கடலை இருக்கா..?” சென்னை MTC பேருந்தில் 40 விநாடிகளில் அரங்கேறிய சினிமா பாணி திருட்டு.. இளம்பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!!
சென்னையில் மாநகரப் பேருந்தில் (MTC) பயணித்த இளம்பெண் ஒருவரிடம், சினிமா பாணியில் திசைத்திருப்பும் வேலையைச் செய்து வெறும் 40 விநாடிகளுக்குள் 2 விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது பையை மர்ம நபர்கள் பிளேடால் கீறி போன்களை அபேஸ் செய்ததை வீடியோவாக வெளியிட்டுப் பேருந்து பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த இளம்பெண் தடம் எண் 17D பேருந்தில் பயணித்தபோது, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி தொடர்ந்து பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்துள்ளார். “குடிப்பதற்குத் தண்ணீர் இருக்கிறதா?”, “கைப்பையில் கடலை இருக்கிறதா?” மற்றும் “பவர் பேங்க் உள்ளதா?” என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு அந்தப் பெண்ணின் கவனத்தை முழுமையாகத் திசைதிருப்பியுள்ளார். பேருந்து ஒரு நிறுத்தத்தில் இருந்து அடுத்த நிறுத்தத்திற்கு நகர்வதற்குள், அதாவது 30 முதல் 40 விநாடிகளுக்குள் இந்தத் திசைத்திருப்பல் நாடகம் அரங்கேறியுள்ளது.
https://twitter.com/polimernews/status/2088098640216850483/video/1
மூதாட்டி பேச்சு கொடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த இளம்பெண்ணின் ஆடையை மறைத்து அவரது பையை பிளேடால் லாவகமாகக் கீறி, அதிலிருந்த 2 செல்போன்களையும் மர்ம நபர்கள் அபேஸ் செய்துள்ளனர். பேருந்தை விட்டு இறங்கிய பிறகே தனது போன்கள் திருடப்பட்டதை அறிந்த அந்தப் பெண், “இதுபோன்ற திருட்டுகளைச் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன்” என மிகுந்த ஆதங்கத்துடன் வீடியோவில் பகிர்ந்துள்ளார். இச்சம்பவம் குறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
