LATEST NEWS
அடப்பாவிங்களா… அதிகாரி வர்ற வரைக்கும் ஆளை விடவே மாட்டோம்…சிக்னல் வரலனு டவரில் ஊழியரை கட்டி வைத்த மக்கள்..!!
உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் உள்ள பிந்த்கி கோட்வாலி பகுதிக்குட்பட்ட ஹர்தௌலி கிராமத்தில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் மொபைல் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த பகுதியில் 5G நெட்வொர்க் சேவைகள் கிடைக்கவில்லை என்றும், இதனால் அழைப்புகள் பேசுவதற்கும் இணையத்தைப் பயன்படுத்துவதற்கும் கடும் சிரமம் அடைந்து வந்ததாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கிராம மக்கள் நீண்ட நாட்களாக கடும் அதிருப்தியிலும் விரக்தியிலும் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலையில் டவர் ஊழியர் ஒருவர் பணிக்கு வந்தபோது ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவரைச் சிறைபிடித்துள்ளனர். தொலைத்தொடர்பு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நேரில் வந்து நெட்வொர்க் பிரச்சினையைத் தீர்க்கும் வரை அந்த ஊழியரை விடுவிக்க மாட்டோம் என்று கூறிய கிராம மக்கள், அவரை டவரிலேயே கட்டி வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவி வைரலானது.
தகவலறிந்த பிந்த்கி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிராம மக்களின் பிடியிலிருந்து அந்த மொபைல் டவர் ஊழியரை பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக பதேபூர் காவல்துறை தனது எக்ஸ் தளத்தில், சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கிராம மக்களிடமும் தகவல்களைச் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
