LATEST NEWS
உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்மகிட்ட இருக்கும்போது அவங்க கிட்ட ஏன் கெஞ்சனும்..? சி.எம். விஜய் பயணத்திற்கு துரைமுருகன் அதிரடி எதிர்ப்பு..!!
காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் கர்நாடக மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியான தகவலுக்கு, திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்ச நீதிமன்ற உத்தரவு நம் கைவசம் இருக்கும்போது நாம் யாரிடமும் போய் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை என்று மிகக் காட்டமாகத் தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரில் உரிய பங்கைத் தர கர்நாடகா தொடர்ந்து மறுத்து வரும் சூழலில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக, முதலமைச்சர் விஜய் அவர்கள் வரும் ஆகஸ்டு 3-ஆம் தேதி பெங்களூரு சென்று கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை நேரில் சந்தித்துப் பேச விருப்பம் தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இந்த நேரடிப் பேச்சுவார்த்தை முயற்சி தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
முதலமைச்சரின் இந்த அதிரடி முடிவுக்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்த துரைமுருகன், காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் எப்போதும் காவிரி மேலாண்மை வாரியம் அல்லது ஒழுங்காற்று குழு மற்றும் உச்ச நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்திய காலத்தில் நீதிமன்ற உத்தரவுகள் எதுவும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தெளிவான தீர்ப்பு இருக்கும்போது, அதை விடுத்து நேரடியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் நம்மிடம் இருக்கும் சட்டப்பூர்வ நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் வீணாகி, நீர்த்துப்போய்விடும் என்று எச்சரித்துள்ளார்.
