LATEST NEWS
90 வயசுல வந்த ஆசை… “பணத்தை தராட்டா போட்டோவை லீக் பண்ணிடுவோம்” ரூ.9 லட்சத்தை ஆட்டையை போட்ட கும்பல்… பகீர் கிளப்பும் பிண்ணனி..!!
ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில், திருமணப் பதிவு மையம் என்ற பெயரில் 90 வயது முதியவரிடம் பொய் வழக்கு மற்றும் சமூகப் அவப்பெயர் ஏற்படுத்தி விடுவதாகப் மிரட்டி 9 லட்சம் ரூபாய் வரை சுருட்டிய மோசடிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட முதியவரின் 79 வயது மகன் ஜெய்ப்பூரில் உள்ள மகேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு ‘ஷாதி சென்டர் டாட் காம்’ என்ற போலி திருமணத் தகவல் மையத்தைச் சேர்ந்த நபர்கள் முதியவரைத் தொடர்பு கொண்டு, ஆசை வார்த்தைகள் கூறி நம்பிக்கையை ஏற்படுத்தித் தங்கள் வலையில் வீழ்த்தியுள்ளனர்.
அதன்பின்பு, முதியவரைப் பொய் வழக்குகளில் சிக்குக வைப்பதாகவும், உறவினர்கள் மற்றும் சமூகத்தில் அவமானப்படுத்துவதாகவும் கூறி மோசடி கும்பல் மிரட்டத் தொடங்கியது. சமூகத்தில் தன் பெயர் கெட்டுவிடும் என்ற பயத்தாலும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அஞ்சியும், முதியவர் குடும்பத்தினருக்குத் தெரியாமல் அக்கும்பல் கூறிய வங்கிப் கணக்குகளுக்குத் தவணை முறையில் தொடர்ந்து பணம் அனுப்பி வந்துள்ளார். இவ்வாறு கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்ற இந்த பிளாக்மெயில் மூலம் அக்கும்பல் முதியவரிடமிருந்து சுமார் 9 லட்சம் ரூபாயைப் பறித்துள்ளது.
குடும்பத் தேவைக்காக மகன் வங்கியின் பாஸ்புக்கை கேட்டபோது முதியவர் தயங்கியுள்ளார். சந்தேகமடைந்த மகன் அன்பாக விசாரித்தபோது, முதியவர் கண்ணீர் விட்டு அழுது நடந்த விபரங்களைக் கூறியுள்ளார். உடனடியாக வங்கி கணக்கு விவரங்களைப் பார்த்தபோது 9 லட்சம் ரூபாய் வரை பறிபோயிருப்பது உறுதியானது. இதையடுத்து, மகேஷ் நகர் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சைபர் பிரிவு உதவியுடன் மோசடி கும்பலின் தொலைபேசி எண்கள், வங்கிப் கணக்குகள் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளைக் கொண்டு குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
