CRIME
அடிப்பாவி..! ரூ.5 லட்சத்துக்கு கணவனின் உயிரை விலைக்குப் பேசிய கொடூர மனைவி..! கொலையைத் மறைக்கப் போட்ட திருட்டு நாடகம் அம்பலம்..!!
டெல்லியின் சங்கமம் விஹார் பகுதியில் வசித்து வந்த 55 வயதான முன்னா லால் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்னணியை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்தச் சம்பவத் தொடர்பில் அவரது மனைவி மஞ்சு மற்றும் அவருக்கு உதவிய சாமன் ஆகிய இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. குடும்பத் தகராறு, நிதி நெருக்கடி மற்றும் அடிக்கடி ஏற்பட்ட அடிதடி சண்டைகளால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவத்தைச் செய்து முடிப்பதற்காக ரூ.5 லட்சம் கூலிப் பேசப்பட்டதாகவும், குற்றவாளிக்கு தஞ்சம் அளித்த குற்றத்திற்காக கிஷன் என்பவரைப் போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
ஆகஸ்ட் 10 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் ரதியா மார்க் பகுதியில் முன்னா லால் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அவரை எய்ம்ஸ் டிராமா சென்டருக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்த ரத்தக் கறைகளை அழிக்கவும், இதை ஒரு திருட்டுச் சம்பவமாக மாற்றவும் முயற்சிகள் நடந்திருப்பதை விசாரணையில் போலீஸார் கண்டறிந்தனர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 1:45 மணிக்கு முகமூடி அணிந்த நபர் ஒருவர் வீட்டிற்குள் சென்று, அதிகாலை 3:15 மணிக்கு வெளியேறுவது தெரியவந்தது.
காவல்துறையின் தீவிர விசாரணையில், முன்னா லாலுக்கு முதலில் தூக்க மாத்திரைகள் கொடுத்து மயக்கமடைய வைத்தது தெரியவந்தது. பின்னர் கழுத்தை நெரித்தும், மின்சாரம் பாய்ச்சியும், மரக் கட்டையால் தாக்கியும் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மனைவியின் தூண்டுதலின் பேரில் சாமன் இந்த கொலையைச் செய்ய ரூ.5 லட்சத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார். சம்பவத்தின் போது அவரிடம் முன்பணமாக ரூ.20,000 கொடுக்கப்பட்ட நிலையில், அதில் ரூ.15,000 ரொக்கத்தைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது கைதானவர்களிடம் கொலைக்கு பயன்படுத்திய பொருட்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
