CRIME
“கணவனைச் சிறைக்கு அனுப்ப கொடூர திட்டம்..!” முன்னாள் காதலனுடன் மனைவி செய்த விபரீதக் காரியம்… விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!
காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டம் சபாபோரா பகுதியில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பார்சல் மூலம் உயர்ரக போதைப்பொருட்கள் டெலிவரி செய்யப்பட உள்ளதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், காவல்துறையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு டெலிவரியான அந்தப் பார்சலைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் கொக்கைன், சராஸ் உள்ளிட்ட விலை உயர்ந்த போதைப்பொருட்களும் மாத்திரைகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பண்ணையின் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால், தமக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்றும், கோழித் தீவனம் அனுப்புவதாகக் கூறியே முகவரியைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கின் மீது சந்தேகம் கொண்ட போலீசார், உரிமையாளரின் செல்போன் அழைப்புகளைச் சோதனையிட்டதில், சவுதி அரேபியாவில் உள்ள ஒரு எண்ணிலிருந்து வந்த அழைப்புகள் குறித்துத் தெரியவந்தது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அவரது திருமணத்தை நிறுத்துமாறு மிரட்டல் விடுத்து அதே எண்ணில் இருந்து நபர் ஒருவர் பேசியதும் விசாரணையில் அம்பலமானது. இதன் அடிப்படையில் விசாரணை திசை மாறியதுடன், உரிமையாளரின் மனைவியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
பெற்றோர் வற்புறுத்தலால் திருமணம் செய்துகொண்ட அந்தப் பெண், திருமணத்திற்குப் பிறகும் தனது முன்னாள் காதலன் தாரிக் அகமதுடன் தொடர்பில் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. கணவரைச் சிறையில் தள்ளிவிட்டு காதலனுடன் வாழத் திட்டமிட்ட அவர்கள், சவுதி அரேபியாவிற்குத் தப்பிச் சென்ற நண்பர் அரீப் உதவியோடு கோழித் தீவனம் போல் நடித்துப் போதைப்பொருளைப் பண்ணைக்கு டெலிவரி செய்துள்ளனர்; மேலும், இவர்களே போலீசாருக்கும் ரகசியத் தகவல் அளித்து கணவரைச் சிக்கவைத்துள்ளனர். திறமையான இந்த விசாரணையின் மூலம் உண்மை வெளிவந்ததை அடுத்து, கோழிப் பண்ணை உரிமையாளரின் மனைவியும் அவரது காதலன் தாரிக் அகமதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
