LATEST NEWS
முதலில் மருத்துவர்… அப்புறம்தான் மணப்பெண்..! திருமண மண்டபத்தில் உயிர்காத்த பெண் மருத்துவருக்குக் குவியும் பாராட்டு..!!
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த மருத்துவர் ஷிரின் சுபைர் என்பவருக்கும், மருத்துவர் ரிஜாஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திருமணச் சடங்குகளின் இடையே கேட்டரிங் குழுவைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதில் ஒரு பெண்ணுக்கு மூக்கிலிருந்து ரத்தம் வடியத் தொடங்கியதோடு, மற்றொரு பெண்ணுக்குக் கடுமையான மயக்கம் ஏற்பட்டது. மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு இருந்த ஷிரின் ஒரு மருத்துவர் என்பதை அறிந்த உறவினர்களும் விருந்தினர்களும் உடனடியாக அவரை உதவிக்கு அழைத்தனர்.
தன் வாழ்வின் மிக முக்கியமான தருணத்தில் இருந்த போதிலும், மணப்பெண் உடையில் இருந்த மருத்துவர் ஷிரின் சிறிதும் தயங்காமல் உடனடியாகத் திருமணச் சடங்குகளை நிறுத்திவிட்டு நோயாளிகளுக்கு முதலுதவி செய்ய விரைந்தார். மூக்கில் ரத்தம் வடிந்த பெண்ணை முன்னோக்கிச் சாய்த்து மூக்கைப் பிடித்துக்கொள்ளச் செய்தும், மயக்கமடைந்த பெண்ணைக் கால்களை உயர்த்திய நிலையில் படுக்க வைத்தும் உரிய முதலுதவிகளைத் தகுந்த நேரத்தில் வழங்கினார். அவசர மருத்துவப் பிரிவில் மேல்படிப்பு படித்து வரும் இவர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.
மணப்பெண் கோலத்தில் மருத்துவர் ஷிரின் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் இந்தக் காட்சி இணையத்தில் வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “முதலில் மருத்துவர், அதற்குப் பிறகுதான் மணப்பெண்” என்று இணையவாசிகள் அவரைப் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய மருத்துவர் ஷிரின், “சாலையில் யாராவது மயங்கி விழுந்தால் உடனடியாக உதவுவது போலத்தான் இதுவும், இதில் பிரம்மாண்டமாகப் போற்றுவதற்கு எதுவும் இல்லை; இது ஒரு மருத்துவராக எனது கடமை மட்டுமே” என்று மிகவும் எளிமையாகக் கூறியுள்ளார்.
