CRIME
“நொடிப்பொழுதில் துண்டான கை..!” தேங்காய் வெட்டும் அரிவாளால் சக தொழிலாளியையே செய்த வெறிச்செயல்.. அலறியபடி மருத்துவமனைக்கு ஓடிய நபர்.. பரபரப்பு பின்னணி..!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, தோட்டத்தில் தேங்காய் வெட்டும் வேலை தொடர்பாக இரு தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் போட்டியில், ஒரு தொழிலாளி மற்றொருவரின் கையை அரிவாளால் துண்டித்த கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது தோட்டத்தில், பெருந்துறை அருகே உள்ள வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் பல ஆண்டுகளாகத் தேங்காய் வெட்டும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் புதிதாக அதே தோட்டத்திற்கு வேலைக்கு வந்ததால், யார் அதிக வேலை செய்வது மற்றும் யார் முதலாளியின் நம்பிக்கைக்கு உரியவர் என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே நேற்று கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொழில் போட்டி காரணமாக இன்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு வெடித்தபோது, ஆத்திரமடைந்த ரஞ்சித் தான் வைத்திருந்த தேங்காய் வெட்டும் அரிவாளால் முனியாண்டியின் கையை ஆக்ரோஷமாக வெட்டித் துண்டித்துள்ளார். இதில் படுகாயமடைந்த முனியாண்டி, துண்டான தனது கையை ஒரு பிளாஸ்டிக் கவரில் எடுத்துக்கொண்டு அலறியவாறே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்குப் போதிய சிகிச்சை வசதிகள் இல்லாததால், துண்டான கையை ஐஸ் பேக்கில் பாதுகாப்பாக வைத்து, மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து மூலனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
