LATEST NEWS
அறிவாலயத்தை வாடகைக்கு விடுவதா..? தமிழர்கள் வீட்டுக்கு எப்போ வெள்ளை அடிச்சாங்கன்னு தெரியுமா உங்களுக்கு..? காரில் தேசிய கொடி வந்ததால் ஆட்டம் போடாதீங்க.. அமைச்சர் நிர்மல்குமாருக்கு ஆ.ராசா பதிலடி..!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆளுங்கட்சி அமைச்சர் நிர்மல்குமார், “அண்ணா அறிவாலயத்திற்கு வெள்ளையடித்து வாடகைக்கு விடும் நிலை உருவாகும்” என்று திமுகவை விமர்சித்துப் பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு திமுக எம்பி ஆ.ராசா தற்போதைய ஆளுங்கட்சி அமைச்சரை மறைமுகமாகக் கண்டித்துப் பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்பி ஆ.ராசா, இன்றைக்குச் சிலருக்குக் காரில் தேசியக் கொடி வந்துவிட்ட ஒரே காரணத்தினால் அறிவாலயத்தை வாடகைக்கு விடலாம் என்று பேசி வருவதாகச் சாடினார். பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோர் அரசியலுக்கு வந்த பிறகுதான் தமிழர்கள் தங்களது வீடுகளுக்கே வெள்ளையடித்துக் கொண்டார்கள் என்றும், அறிவாலயம் தோன்றிய பிறகுதான் தமிழ்நாடே தனக்கு வெள்ளையடித்துக் கொண்டது என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும், அத்தகைய பெருமை வாய்ந்த அண்ணா அறிவாலயத்தைக் குறைசொல்கின்ற ஒரு கூட்டம்தான் இன்றைக்குத் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது என்று ஆ.ராசா மிகக் கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் இந்தத் தற்போதைய கூட்டத்தை வீழ்த்துவதற்கும், இங்கிருந்து அவர்களை விரட்டுவதற்கும் அனைத்து முயற்சிகளையும் திமுக எடுக்கும் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
