LATEST NEWS
“மாற வேண்டியது நான் இல்ல… அவங்கதான்..!” அலுவலகத்தில் வீசிய சிகரெட் துர்நாற்றத்தால்… டென்ஷனாகி வேலையை தூக்கி எறிந்த பெண் ஊழியர்..! வைரலாகும் விசித்திரமான இ-மெயில்..!!
கார்ப்பரேட் உலகில் பொதுவாகக் குறைந்த சம்பளம், பணிச் சுமை, பணிக்கும் வாழ்க்கைக்குமான சமநிலையின்மை அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த பணிச்சூழல் போன்றவற்றால்தான் ஊழியர்கள் வேலையை விட்டு விலகுவார்கள். ஆனால், அலுவலகத்தில் வீசும் சிகரெட் துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல் ஒரு பெண் ஊழியர் ராஜினாமா செய்துள்ள விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜான்ஹவி சாவ்டா என்ற பெண் ஊழியர் அனுப்பிய முறையான ராஜினாமா மின்னஞ்சல் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நிறுவன நிர்வாகத்திற்கு அனுப்பிய அந்த மின்னஞ்சலில், தனது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளுமாறும், 2026 ஆகஸ்ட் 25 தான் தனது கடைசி வேலை நாளாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “என்னால் சிகரெட் துர்நாற்றத்தை சற்றும் சகித்துக் கொள்ள முடியவில்லை; முடிந்தவரை அனுசரித்துப் போக முயன்றேன், ஆனால் முடியவில்லை. எவ்வாறாயினும், மாற வேண்டியது நான் அல்ல, அவர்கள் தான்” என்று மிக வெளிப்படையாகத் தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார். அலுவலகத்தில் சக ஊழியர்கள் சாப்பிடும் இடம் மற்றும் பேண்ட்ரி பகுதியிலேயே சிகரெட் பிடித்துவிட்டு லாபியில் வந்து அமர்வதால் அலுவலகம் முழுவதும் துர்நாற்றம் வீசியதாகவும், மாஸ்க் அணிந்து பணிபுரிந்தும் பலன் கிடைக்கவில்லை என்றும் அவர் விவரித்துள்ளார்.
இந்த ராஜினாமா பதிவு எக்ஸ் தளத்தில் வைரலாகி 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களையும், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது. இது தொடர்பாக இணையவாசிகளிடையே இருவேறு கருத்துகள் எழுந்துள்ளன. பெரும்பாலானோர் அப்பெண்ணின் முடிவைப் பாராட்டியதுடன், பிறர் புகைப்பதால் ஏற்படும் ‘பேசிவ் ஸ்மோக்கிங்’ ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்றும், தூய்மையான காற்றைப் பெறுவது ஊழியர்களின் அடிப்படை உரிமை என்றும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேவேளையில், ‘புகைபிடிக்கத் தடை’ என்ற விதிமுறை இருக்கும்போது பொதுப் இடங்களில் புகைபிடிக்க நிர்வாகம் எப்படி அனுமதித்தது என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
