LATEST NEWS
“ஹெலிகாப்டரில் பறக்கவா மக்கள் வாக்களித்தார்கள்…?” அரசுப் பள்ளிகளின் அவலநிலையைக் கண்டித்து… கல்வி அமைச்சரை ராஜினாமா செய்ய அபிஜித் தீப்கே வலியுறுத்தல்..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் சீரற்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பொறுப்பேற்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தாதா பூசே உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ நிறுவனர் அபிஜித் தீப்கே வலியுறுத்தியுள்ளார். லத்தூர் மாவட்டம், அவுசா தாலுகாவில் அமைந்துள்ள உஜானி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதிய வகுப்பறைகள், பெஞ்சுகள், கழிப்பறைகள் மற்றும் பாதுகாப்பான சாலை வசதிகள் இல்லாத காரணத்தால் அரசுப் பள்ளிகள் மிகவும் அவலநிலையில் இயங்கி வருவதாகக் குற்றம்சாட்டினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் பேசிய அபிஜித் தீப்கே, “அமைச்சர்களின் செல்ல நாய்களுக்குக் கூட அரசுப் பள்ளி மாணவர்களை விட சிறப்பான வசதிகள் கிடைக்கின்றன; சில பள்ளிகளில் மாணவர்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுகின்றனர். மக்கள் பிரதிநிதிகள் மாணவர்களின் எதிர்காலத்திற்காகப் பணியாற்றவில்லை என்றால் அவர்களுக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? ஹெலிகாப்டரில் பறப்பதற்காகவா அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், அரசியல் தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்தால் மட்டுமே அங்குள்ள நிஜமான பிரச்சைனைகளைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியாக ‘மதம் ஆபத்தில் உள்ளது’ எனப் பிரச்சாரம் செய்வதைக் சுட்டிக்காட்டிய அவர், “இத்தனை ஆண்டுகளாக அழியாத மதம், ஆட்சிக் காலத்தில் அழியப் போவதில்லை; மதம் எங்கும் சென்றுவிடாது, ஆனால் குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயம் பாதிக்கப்படும்” எனக் கூறினார். பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் அரசுப் பள்ளிகளில் மாற்றத்தைக் கொண்டுவரத் தவறிய ஆளும் அரசைக் கண்டித்த அவர், கல்விக்காக உழைக்காத தலைவர்களிடம் வாக்கு கேட்க வேண்டாம் என மக்கள் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், அரசுப் பள்ளிகளின் நிலையைச் சீரமைக்க சிஜேபி சார்பில் ‘School Thik Karo’ என்ற பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
