LATEST NEWS
“தலைமை ஆசிரியரை பார்க்கவே பயமாக இருக்கு” பள்ளியில் என்ன நடக்குன்னு தெரியுமா..? மண்ணெண்ணெய் குடித்த 12ஆம் வகுப்பு மாணவியின் பரபரப்பு வாக்குமூலம்,.. மயிலாடுதுறை அரசுப்பள்ளியில் அதிர்ச்சி..!!
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் கொடுத்த கடுமையான மன உளைச்சல் காரணமாக 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான இந்திரகுமாருக்கும், அங்கு பணியாற்றும் பிற ஆசிரியர்களுக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பான கல்வித்துறை விசாரணையில் தனக்கு ஆதரவாகப் பேசுமாறு மாணவிகளைத் தலைமை ஆசிரியர் வற்புறுத்தியதாகவும், அதற்குச் சம்மதிக்காத குறிப்பிட்ட மாணவிகளை மட்டும் குறிவைத்து அவர் டார்ச்சர் செய்ததாகவும் கூறப்படுகிறது.
தலைமை ஆசிரியர் திட்டியதால் கடுமையான மனவேதனை அடைந்த அந்த மாணவி, நேற்று காலை தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர், மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மாணவியின் உடல்நிலை குறித்து அடுத்த 24 மணி நேரத்திற்குப் பிறகே எதையும் உறுதியாகக் கூற முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த மாணவி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தலைமை ஆசிரியரைப் பார்க்கவே தனக்குப் பயமாக இருக்கிறது, பள்ளிக்குச் செல்லவே அச்சமாக உள்ளது” என்று உருக்கமாகக் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார். மாணவி குணமடைந்த பிறகு, இச்சம்பவத்திற்குக் காரணமான தலைமை ஆசிரியர் மீது அடுத்தகட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
