LATEST NEWS
“இப்படி ஒரு மனுஷனா?!” வெள்ளத்தில் சிக்கிய முதியவர்… தன்னுயிரைக் கொடுத்து மீட்ட நிஜ ஹீரோ..! கேரளாவை உலுக்கிய வீரத் தியாகம்..!!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி கண்ணூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் காரியங்கோடு ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் பென்னி என்ற 61 வயது முதியவர் ஆற்றங்கரையில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் சிக்கிக்கொண்டார். அவரை மீற்பதற்காக நீச்சல் வீரர் ராஜேஷ், ஷிபின் மற்றும் ஜிதின் ஆகியோர் அடங்கிய மீட்புக்குழு களமிறங்கியது.
மீட்புப் பணியின்போது, மற்ற இருவரும் ஆற்றில் இறங்கிய பென்னியிடம் கயிற்றைத் தூக்கி வீசிய நிலையில், அக்கயிற்றை அருகிலுள்ள தென்னை மரத்தில் கட்ட முயன்றபோது ராஜேஷின் கையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் பொருட்படுத்தாமல் ராஜேஷ் நீந்திச் சென்று முதியவரை அடைந்தார். பின்னர் முதியவரை மீட்டு கரைக்கு அழைத்து வரும்போது, தன்னிடம் இருந்த பாதுகாப்பு ஜாக்கெட்டை அவருக்குக் கொடுத்துப் பாதுகாப்பாகக் கரையேற்றினார். ஆனால், முதியவரைக் கரையேற்றிய பின்னர் ஆற்றைக் கடக்கப் பயன்படுத்திய கயிற்றிலிருந்து ராஜேஷின் பிடி நழுவியதால், கடுமையான நீரோட்டத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டார். தீயணைப்புத் துறை, மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மூன்று நாட்களாகத் தீவிரமாகத் தேடிய நிலையில், புலிங்கோம் பாலத்தின் அருகில் ராஜேஷின் உடல் மீட்கப்பட்டது.
திருவனந்தபுரம் மாவட்டம் கல்லியூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், ஒரு நீச்சல் மற்றும் ராப்பெல்லிங் பயிற்றுவிப்பாளராக இருந்துவந்துள்ளார். கேரளாவில் பேரிடர்கள் ஏற்படும் போதெல்லாம் தன்னார்வலராக களமிறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர், 2018 கேரள வெள்ளம் மற்றும் 2024 வயநாடு நிலச்சரிவு பேரிடர் காலங்களிலும் தீவிரமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டவர் ஆவார். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். தன்னுயிரை ஈந்து முதியவரைக் காப்பாற்றிய ராஜேஷின் மறைவு கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு முதலமைச்சர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் இணையவாசிகள் எனப் பலரும் அஞ்சலியும் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.
