LATEST NEWS
“பொறுப்பான பதவியில் இருந்துட்டு இப்படிப் பேசலாமா..? இது நாகரிக அரசியலுக்கு அழகே இல்லை!..” உதயநிதியை நேரடியாகவே வெளுத்து வாங்கிய திருமாவளவன்… சூடாகும் தமிழக அரசியல்..!!!
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நீர் உரிமை ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ‘இரட்டுற மொழிதல்’ வகையில் பேசிய கருத்து தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் மீது பொய்வழக்கு போடுவதே ஆளுங்கட்சியின் வேலை என உதயநிதி கூறியபோது, கூட்டத்தில் இருந்தவர்கள் பிரபல நடிகையின் பெயரை முழக்கமிட்டதாகவும், அதற்கு அவர் கிண்டலாகப் பதிலளிக்கும் முனைப்பில் தவறான பொருள்படும்படி பேசியதாகவும் திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பேச்சு தேசிய அளவிலும் ஆங்கில ஊடகங்களிலும் கண்டிக்கும் அளவிற்குப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பான இடத்தில் இருப்பவர், இதுபோன்று இரட்டைப் பொருள் தரும் எள்ளல் நடையில் பேசுவதைத் தவிர்த்திருக்க வேண்டும் என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். பெண்களைப் பற்றி இழிவாகப் பேசும் இத்தகைய அணுகுமுறை நாகரிக அரசியலுக்கும் அவரது அரசியல் தகுதிக்கும் பொருத்தமானதல்ல என்றும், சுற்றியிருப்பவர்களின் ஆரவாரத்திற்கு ஏற்ப உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் வழக்கத்தைக் கைவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்த உதயநிதியின் இந்த பேச்சு நிச்சயமாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தனது பதிவில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பதே ஆளுங்கட்சியான தவெகவின் மீதான நன்மதிப்பை உயர்த்தும் என்றும் திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய சூழலில், காவிரி நீர் உரிமைக்காக அனைத்துக் கட்சியினரும் இணைந்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குரல் கொடுப்பதே அவசியமானது என்றும், அதற்கேற்ப ஆளுங்கட்சி முதிர்ச்சியுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
