CRIME
“என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான்..!” கள்ளக்காதலனை மதுபாட்டிலால் குத்திக் கொன்ற கணவன்.. 5 ஆண்டுகளுக்குப் பின் வந்த அதிரடித் தீர்ப்பு..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் கொண்டேப்பள்ளி ஊராட்சி மேலூர் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி என்பவருக்கும், ஆர்.பூசாரிப்பட்டியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி திருப்பதி என்பவரின் மனைவிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த மேஸ்திரி திருப்பதி பலமுறை எச்சரித்தும், இருவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தும் அந்தத் தொடர்பு தொடர்ந்து நீடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மேஸ்திரி திருப்பதி, கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி எலக்ட்ரீசியன் திருப்பதியை மது அருந்த அழைத்துச் சென்று, கிருஷ்ணகிரி அருகே கூலங்கொட்டாய் பகுதியில் வைத்து மதுபாட்டிலால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார்.
இக்கொலை வழக்கு தொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேஸ்திரி திருப்பதியைக் கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாகக் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து, நீதிபதி லதா தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றம்சாட்டப்பட்ட மேஸ்திரி திருப்பதிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டதை அடுத்து, அவர் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். திருமணத்தை மீறிய உறவுப் பிரச்சினையில் எலக்ட்ரீசியன் கொல்லப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
